ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதும் முக்கியமான ஆட்டம் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தச் சூழலில் சென்னை அணி நிர்வாகம் தனது ரசிகர்களுக்குச் சிறப்பு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. தற்செயலாக இந்தப் போட்டி நடைபெறும் அதே நாளில்தான், தமிழக வெற்றிப் கழகத்தின் தலைவர் விஜய் தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார். சினிமாவில் பிளாக்பஸ்டர் படங்களை வழங்கிப் பெரும் ரசிகர் பட்டாளத்தைச் சேர்த்த விஜய், கடந்த மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று அரசியலில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், தளபதி விஜய்க்கும் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் விஜய்யின் பதவியேற்பு விழா மற்றும் சிஎஸ்கே போட்டி ஆகிய இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே நாளில் நடப்பதால், மைதானத்திற்கு வரும் ரசிகர்கள் கவனத்தை முழுமையாகக் கிரிக்கெட் மீது மட்டுமே செலுத்த வேண்டும் என்று சென்னை அணி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாகச் சென்னை அணி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், மைதானத்திற்கு வரும் ரசிகர்கள் எந்தவொரு அரசியல் கட்சி சார்ந்தோ அல்லது தனிநபர் சார்ந்தோ பேனர்கள், கொடிகள் அல்லது விளம்பரப் பலகைகளைக் கொண்டு வர வேண்டாம் என்றும், முழுமையான கிரிக்கெட் ஆர்வத்துடன் ஆட்டத்தை ரசிக்குமாறும் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளது.
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்களைப் பிடிப்பதற்கு விஜய் தீவிர முயற்சியில் ஈடுபட்டார். ஆளுநருடன் பலகட்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் கூட்டணி கட்சிகளுடனான ஆலோசனைகளுக்குப் பிறகு தற்போது பெரும்பான்மையை அவர் நிரூபித்துள்ளார். 51 வயதான நடிகரும் அரசியல்வாதியுமான விஜய், நேற்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்தை வழங்கினார். இதனைத் தொடர்ந்தே அவர் இன்று முதலமைச்சராகப் பதவியேற்கும் விழா நடைபெறுகிறது.
கிரிக்கெட் களத்தைப் பொறுத்தவரை புள்ளிப் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இது வாழ்வா சாவா ஆட்டமாகும். பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை அணி உள்ளது. அதே சமயம் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் லக்னோ அணியை வீழ்த்தித் தனது வெற்றிப் பயணத்தைத் தொடரச் சென்னை அணி வீரர்கள் தீவிரமாகப் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த சீசனில் சென்னை அணி சில ஏற்ற இறக்கங்களைச் சந்தித்திருந்தாலும், சொந்த மைதானத்தில் ரசிகர்களின் ஆதரவுடன் மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சேப்பாக்கம் மைதானத்தில் வழக்கமாக மஞ்சள் நிறக் கொடிகளும் ஆரவாரங்களும் நிறைந்திருக்கும் நிலையில், இன்றைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. ரசிகர்கள் எந்தவிதமான அசம்பாவிதங்களும் இன்றிப் போட்டியை ரசிக்க வேண்டும் என்பதே அணி நிர்வாகத்தின் நோக்கமாக உள்ளது. விஜய்யின் அரசியல் பயணம் ஒருபுறம் வரலாற்றைப் படைத்துக் கொண்டிருக்க, மறுபுறம் சென்னை அணி தனது கிரிக்கெட் வரலாற்றில் அடுத்த கட்டத்திற்குச் செல்லப் போராடி வருகிறது. இந்த இரண்டு மாபெரும் சக்திகளின் நிகழ்வுகளும் ஒரே நாளில் நடப்பதால் சென்னை மாநகரமே இன்று விழாக்கோலம் பூண்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.