Indian Hockey Team High-Fives Pakistan Players: What Happened During the Match? 
விளையாட்டு

கிரிக்கெட்டுக்கு மாறாக பாகிஸ்தான் வீரர்களுடன் ஹை-ஃபை செய்துகொண்ட ஹாக்கி அணியினர் - போட்டியில் நடந்தது என்ன?

பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆப்பரேஷன் சிந்தூர் நிகழ்வுகளுக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் போட்டிகளுக்கு முன்பும் பின்பும் கைகொடுப்பதை முற்றிலுமாகத் தவிர்த்து வருகின்றன.

மாலை முரசு செய்தி குழு

நெதர்லாந்தின் ஆம்ஸ்டெல்வீன் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற வேகனர் மைதானத்தில், உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் 'D' பிரிவுப் (Pool D) போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின.

போட்டி தொடங்குவதற்கு முன் இரு நாட்டு வீரர்களும் பாரம்பரிய கைகொடுத்தலுக்குப் பதிலாக 'ஹை-ஃபைவ்' (High-five) செய்து கொண்டு விளையாட்டைத் தொடங்கினர்.

பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆப்பரேஷன் சிந்தூர் நிகழ்வுகளுக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் போட்டிகளுக்கு முன்பும் பின்பும் கைகொடுப்பதை முற்றிலுமாகத் தவிர்த்து வருகின்றன.

அந்த அரசியல் பதற்றத்தின் எதிரொலிப்பாகவே இந்த ஹாக்கிப் போட்டியிலும் இது தொடருகிறதா கேள்வி எழுந்தது. ஆனால் முடிவில் இரு நாட்டு வீரர்களும் கைக்குலுக்கி விடைபெற்றனர்.

ஆட்டம் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்திலேயே இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் பெனால்டி கார்னர் வாய்ப்பைப் பயன்படுத்தி முதல் கோலை அடித்தார். அதைத் தொடர்ந்து 11-வது நிமிடத்தில் ஃபார்வர்ட் வீரர் அபிஷேக் ஒரு அற்புத ஃபீல்ட் கோல் அடிக்க, இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது கால்பகுதியில் (21-வது நிமிடம்) மீண்டும் ஒரு பெனால்டி கார்னரை கோலாக மாற்றி ஹர்மன்பிரீத் அசத்த, இந்தியா 3-0 என வலுவான நிலையை அடைந்தது. இருப்பினும், பாகிஸ்தான் அணி எளிதில் விட்டுக்கொடுக்கவில்லை. 22-வது நிமிடத்தில் பாகிஸ்தானின் ஹன்னான் ஷாஹித் ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார்.

24-வது நிமிடத்தில் அபிஷேக் தனது இரண்டாவது கோலை பதிவு செய்ய, அதே நிமிடத்தில் பாகிஸ்தானின் சுஃபியான் கான் பெனால்டி கார்னர் மூலம் ஒரு கோல் அடித்தார்.

34-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி ஸ்ட்ரோக் வாய்ப்பை ஹர்திக் சிங் கோலாக மாற்றினார். போட்டியின் 46-வது நிமிடத்தில் பாகிஸ்தானின் ஹன்னான் ஷாஹித் மீண்டும் ஒரு கோல் அடித்தாலும், இந்திய டிஃபண்டர்களை தாண்டி அவர்களால் மேலும் கோல்களை அடிக்க முடியவில்லை.

இறுதியில் 5-3 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. கடந்த 10 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வியடையவில்லை என்ற சாதனையை இந்தியா தொடருகிறது.

இந்த தோல்வியினால் பாகிஸ்தான் உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியிருக்கிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்