csk  
விளையாட்டு

சிஎஸ்கே தோற்றதுக்கு 'பில்லி சூனியம்' காரணமா? வைரலாகும் லெமன் வீடியோ.. உண்மையை உடைத்த லலித் மோடி!

ஒரு அணி உரிமையாளர் இது போன்ற மூடநம்பிக்கை காரியங்களில் ஈடுபட்டது உண்மைதான் என்று அவர் ஒரு வெடிகுண்டை வீசியுள்ளார்...

மாலை முரசு செய்தி குழு

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த பரபரப்பான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது. மைதானத்தில் நடந்த அதிரடி ஆட்டங்களை விட, சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு போலி கடிதம் தற்போது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. ஐதராபாத் ரசிகர் ஒருவர் மைதானத்தில் 'பில்லி சூனியம்' வைத்ததாகவும், அதனால் தான் சிஎஸ்கே தோற்றது என்றும் கூறி, சென்னை அணி நிர்வாகம் புகார் அளித்தது போன்ற ஒரு கடிதம் இணையத்தில் வைரலானது. ஆனால், இது முற்றிலும் ஒரு வதந்தி என்றும், அந்த கடிதம் போலியானது என்றும் தற்போது தெரியவந்துள்ளது.

மைதானத்தில் இருந்த ஐதராபாத் ரசிகர் ஒருவர் கையில் எலுமிச்சம்பழத்தை வைத்துக்கொண்டு ஏதோ ஒரு சடங்கு செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த ரசிகர் செய்த சடங்கிற்குப் பிறகுதான் சிஎஸ்கே வீரர் ஒருவர் ஆட்டமிழந்தார் என்று ரசிகர்கள் சிலர் கிளப்பிவிட, அதுவே பின்னர் ஒரு போலி புகார் கடிதமாக உருவெடுத்தது. இதைக் கவனித்த ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி, இந்த விவகாரம் குறித்து தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். இப்போது வைரலாகும் கடிதம் போலியானது தான் என்றாலும், கடந்த காலங்களில் ஒரு அணி உரிமையாளர் இது போன்ற மூடநம்பிக்கை காரியங்களில் ஈடுபட்டது உண்மைதான் என்று அவர் ஒரு வெடிகுண்டை வீசியுள்ளார்.

இது குறித்து லலித் மோடி கூறுகையில், "இந்த முறை பரவும் கடிதம் போலியானது போலத்தான் தெரிகிறது. ஆனால் இதற்கு முன்பு ஒரு அணி உரிமையாளர் நிஜமாகவே இது போன்ற காரியங்களில் ஈடுபட்டார். 2011-ம் ஆண்டு சீசனின் போது ஒரு அணி உரிமையாளர், எதிரணியின் டிரெஸ்ஸிங் ரூமிற்குச் சென்று இது போன்ற சடங்குகளைச் செய்ததை நான் பார்த்தேன். அது குறித்த ஆதாரங்கள் கிடைத்ததும் சம்பந்தப்பட்ட அணி உரிமையாளர்களை நான் எச்சரித்தேன். இது போன்ற ரகசியமான மற்றும் விசித்திரமான விஷயங்களை நான் விரைவில் எடுக்கப்போகும் சினிமா அல்லது வெப் சீரிஸில் வெளிச்சத்திற்கு கொண்டு வருவேன்" என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2026 புள்ளிப்பட்டியலைப் பொறுத்தவரை, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஆடிய 6 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளும் தலா 6 புள்ளிகளுடன் கடும் போட்டியைத் தருகின்றன. அதேசமயம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்று 7-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. களத்தில் நடக்கும் போட்டியைத் தாண்டி, இந்த 'மந்திர தந்திர' விவகாரம் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.