நடப்பு ஐபிஎல் 2026 தொடரின் எலிமினேட்டர் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி வெறும் 29 பந்துகளில் 97 ரன்கள் குவித்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர வைத்துள்ளார். ஐபிஎல் வரலாற்றிலேயே மிக அதிவேக சதமடித்த வீரர் என்ற சாதனையைப் படைக்கும் நிலைக்கு மிக அருகில் அவர் சென்றதை ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஆச்சரியத்துடன் பார்த்தது. கிரிக்கெட் உலகின் மாபெரும் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர் முதல் கிரிஸ் கெய்ல் வரை பலரும் இந்த 15 வயது சிறுவனைப் பாராட்டித் தள்ளி வரும் வேளையில், இந்தியாவின் அண்டை நாடும் கிரிக்கெட் களத்தின் பரம எதிரியுமான பாகிஸ்தானில் இருந்தும் இவருக்குப் பாராட்டுக்கள் குவியத் தொடங்கியுள்ளன. பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) தொடரில் விளையாடும் பெஷாவர் சால்மி அணியின் உரிமையாளரும், அந்நாட்டின் பிரபல தொழிலதிபருமான ஜாவேத் அப்ரிடி, வைபவ் சூர்யவன்ஷியின் அசாத்திய ஆட்டத்தைப் பாராட்டி தனது சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இது குறித்து எழுதியுள்ள ஜாவேத் அப்ரிடி, 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷியின் இந்த 97 ரன் அதிரடி ஆட்டத்தைப் பார்த்து தான் முற்றிலும் மிரண்டு போய்விட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இருக்கையின் நுனிக்கே ரசிகர்களை வரவழைக்கும் அளவிற்கு அவரது ஆட்டம் அசாத்தியமாக இருந்ததாகவும், இவ்வளவு சிறிய வயதில் இப்படி ஒரு திறமையைப் பார்ப்பது மிகவும் அரிதான மற்றும் ஸ்பெஷலான விஷயம் என்றும் அவர் பாராட்டியுள்ளார். மேலும், அந்த சிறுவனுக்குத் தனது அன்பையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ள அவர், வைபவ் சூர்யவன்ஷி எதிர்கால கிரிக்கெட் உலகின் ஒரு மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக உருவெடுப்பார் என்பதில் சந்தேகமே இல்லை என்றும் புகழ்ந்துள்ளார்.
இதே வேளையில், ஐபிஎல் தொடரானது வைபவ் சூர்யவன்ஷி போன்ற இளம் திறமையாளர்களுக்கு ஒரு மிகப்பெரிய மேடையை அமைத்துக் கொடுத்திருப்பதைப் போல, பாகிஸ்தானிலும் பிஎஸ்எல் போன்ற லீக் போட்டிகள் இளம் வீரர்களை உருவாக்குவதற்கு எவ்வளவு முக்கியம் என்பதையும் ஜாவேத் அப்ரிடி சுட்டிக்காட்டியுள்ளார். இதனால்தான் தங்களது பிஎஸ்எல் போன்ற தொடர்கள் மிகவும் அவசியமாகின்றன என்றும், வைபவ் சூர்யவன்ஷியைப் போல உலக அரங்கில் தங்களது திறமையைக் காட்டி ஒளிரச் செய்ய பாகிஸ்தான் சிறுவர்களுக்கும் இதுபோன்ற கூடுதல் வாய்ப்புகளையும் தளங்களையும் தாங்கள் உருவாக்க வேண்டும் என்றும் அப்ரிடி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த ஜாவேத் அப்ரிடி தான் அண்மையில் பாபர் அசாம் தலைமையின் கீழ் பிஎஸ்எல் 2026 கோப்பையைக் கைப்பற்றிய பெஷாவர் சால்மி அணியின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
மறுபுறம், வைபவ் சூர்யவன்ஷி தனது 2-ஆவது ஐபிஎல் ஆண்டிலேயே பல வரலாற்றுச் சாதனைகளைத் தகர்த்து எறிந்துள்ளார். நடப்பு ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இந்த இளம் வீரர் தொடர்ந்து அதிரடி காட்டி வருவதோடு, இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலிலும் தற்பொழுது முதலிடத்தில் உள்ளார். வெறும் 15 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், யாரும் நம்ப முடியாத வகையில் 242.85 என்ற அசாத்திய ஸ்ட்ரைக் ரேட்டில் 680 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார். வைபவ் சூர்யவன்ஷியின் இந்த அபாரமான ஆட்டம் தான், தற்பொழுது புதுப்பொலிவு பெற்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிப் பயணத்திற்கு முக்கிய உந்துசக்தியாக அமைந்துள்ளது. இந்த சீசனில் ராஜஸ்தான் அணி ஐபிஎல் 2026 கோப்பையைக் கைப்பற்ற இன்னும் வெறும் 2 வெற்றிகள் மட்டுமே தேவை என்ற நிலையில் உள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.