

கிருஷ்ணகிரி அடுத்த ராயக்கோட்டை சாலை பகுதியில் உள்ள வாடகை வீட்டில் 14 வயது பள்ளி மாணவன் ஒருவன், பெற்றோருடன் வசித்து வந்துள்ளான். அருகே உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்த நிலையில், ஏதோ சில காரணங்களால் கடந்த 6 மாதமாக பள்ளிக்கு செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இவனுடன் 9ம் வகுப்பு படித்த சக மாணவி ஒருவர், இவரது வீட்டின் மேல் மாடியில் குடும்பத்துடன் வாடகைக்கு வசித்து வந்துள்ளார்.
அந்த மாணவனுடன் பயின்ற சக பள்ளி நண்பர்கள் 2 பேர் அடிக்கடி அவனை சந்திக்க வீட்டிற்கு வந்து சென்றுள்ளனர். அவர்கள் வந்து செல்லும் போது மேல் வீட்டில் அவர்களது சக பள்ளி வகுப்பு மாணவி ஒருவர் இருப்பதை பார்த்துள்ளனர். அவர்கள் வந்து சென்ற நிலையில், அந்த மாணவி குறித்து இடைநின்ற பள்ளி மாணவனிடம் விசாரித்துள்ளனர். இடைநின்ற பள்ளி மாணவனோ, அந்த மாணவியின் இன்ஸ்டா ஐடி, பேஸ்புக் ஐடி, மொபைல் நம்பர் என அனைத்தும் தனக்கு தெரியும் எனவும், “என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்” எனவும் கூறியுள்ளார்.
பின்னர் 3 சிறுவர்களும் சேர்ந்து அந்த மாணவியின் இன்ஸ்டா ஐடியை தேடி பார்த்து, அதில் இருந்த அந்த மாணவியின் புகைப்படங்களை டவுன்லோடு செய்து வைத்துள்ளனர். பின்னர் இவர்கள் புதியதாக ஒரு பேக் இன்ஸ்டா ஐடியை உருவாக்கியுள்ளனர். அந்த ஐடியில் இருந்து அந்த மாணவிக்கு ரெக்வஸ்ட் கொடுத்து, மெதுவாக மெசேஜ் மூலம் பேச ஆரம்பித்துள்ளனர். அதன்பின் அந்த மாணவிக்கு மெசேஜில் மிரட்டும் விதமாக பேசி அதாவது, “நீ பள்ளியில் யார், யாருடன், பேசுகிறாய்? யாரை லவ் பண்ணுற? உங்க அக்கா யாரை லவ் பண்றாங்க? உங்க அக்கா கூட யார், யாரெல்லாம் பழக்கம்? எல்லாமே எங்க கிட்ட வீடியோவா இருக்கு” என மிரட்டியுள்ளனர்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த மாணவி, எதுவும் செய்து விடாதீர்கள் என இன்ஸ்டா மேசேஜிலேயே கெஞ்சியதாக கூறப்படுகிறது. பின்னர் ஏற்கனவே SAVE செய்து வைத்திருந்த அந்த மாணவியின் படத்தை ஆடையின்றி மார்பிங் செய்து மீண்டும் அந்த பெண்ணிற்கே அனுப்பியதுடன், இதே போல உள்ள உங்க அக்காவின் போட்டோக்களையும் சமூக வலைதளங்களில் பரப்பி விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். மேலும் நாங்கள் இதையெல்லாம் செய்யாமல் இருக்க வேண்டுமானால், “நீ ஆடையில்லாமல் உன்னை முழுமையாக வீடியோ மற்றும் போட்டோக்களை எடுத்து அனுப்ப வேண்டும்” என கேட்டுள்ளனர். இதனால் பயந்து போன அந்த மாணவி, வேறு வழியின்றி ஆடை இல்லாமல் வீடியோ மற்றும் போட்டோக்களை எடுத்து அந்த இன்ஸ்டா ஐடிக்கே அனுப்பியுள்ளார்.
அந்த வீடியோ மற்றும் போட்டோக்களை டவுன்லோடு செய்து கொண்ட அவர்கள், மாணவியின் தந்தைக்கு இன்ஸ்டாவில் அனுப்ப இன்ஸ்டாவை பக்கத்தை தேடியுள்ளனர். ஆனால் அவருக்கு இன்ஸ்டாவில் அக்கவுண்ட் இல்லாததால், அவரது மொபைல் எண்ணை வாங்கி, அந்த எண்ணின் வாட்ஸ்அப்பிற்கு, மாணவியின் ஆடையில்லாத வீடியோ மற்றும் படங்களை, கீழ் வீட்டில் இருக்கும் இடைநின்ற பள்ளி மாணவனின் செல்போன் எண்ணில் இருந்தே அனுப்பியுள்ளனர். மேலும் "இவற்றை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன், அப்படி பரப்பினால் உங்கள் மானம் கப்பலேறி நீங்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள வேண்டியது தான் எனவும்” மிரட்டியுள்ளனர். “அவ்வாறு செய்யக்கூடாது என்றால் 10 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும்” எனவும் கேட்டு மிரட்டியுள்ளனர்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தந்தை, கீழ் வீட்டில் இருந்த இடைநின்ற மாணவனிடம் சென்று கேட்க, அவனோ இந்த நம்பரை எனது நண்பன் தான் பயன்படுத்துகிறான் என அவனை காட்ட அவனும், இவன் கூறியது போல் இன்னொரு நண்பனை காட்ட, கடைசியில் 3 பேரும் சேர்ந்து பிளான் போட்டு இந்த குற்றத்தில் ஈடுப்பட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து மாணவியின் தந்தை கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பள்ளி மாணவர்கள் 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் கூர்நோக்கு மையத்தில் அடைத்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.