

ஆஸ்திரேலியா, அடிலெய்டில் உள்ள மசாஜ் சென்டர் ஒன்றில் பணிபுரிந்து வந்த 39 வயதான இந்திய வம்சாவளி மசாஜ் சிகிச்சையாளர், 61 பெண்களைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதையடுத்து அவருக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 13 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் சிறை தண்டனை விதித்துள்ளது. அவரது நடத்தை "கட்டுப்பாடற்றதாக" இருந்ததாகவும், "பிடிபடும் வரை எந்தவிதமான கட்டுப்பாட்டையும் காட்டவில்லை" என்றும் நீதிபதி கூறியுள்ளார்.
இந்தியாவை பூர்வீகமாக கொண்ட சுமித் சதீஷ் ரஸ்தோகி, முறையான கல்வி தகுதிகள் இல்லாதபோதிலும் கிளெனெல்க் நகரில் உள்ள ஒரு மசாஜ் நிலையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். பல மாதங்களாக தொடர்ந்து செய்த குற்றச்செயல்களுக்காக, குறைந்தது ஒரு தசாப்த காலம் சிறையில் அடைக்கப்படுவர் என நீதிமன்றம் விவரித்தது. அறிக்கைகளின்படி, குற்றச்சாட்டப்பட்ட மசாஜ் தெரபிஸ்ட் ரஸ்தோகி, 55 ஆபாச வீடியோக்களை படம்பிடித்த குற்றங்கள் மற்றும் 42 கடுமையான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் உட்பட மொத்தம் 97 குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளார். அதற்கு தண்டனையாக அவருக்கு 13 ஆண்டுகள் 10 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் 10 ஆண்டுகள் 10 மாதங்கள் பரோல் இல்லாத காலமாகும். மேலும், அவர் விடுதலையான பிறகு நாடு கடத்தப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபர் 2021 முதல் ஜூலை 2022 வரை, கிளெனெல்கில் உள்ள 4ever மசாஜ் கிளினிக்கில் பணிபுரிந்த ரஸ்தோகி சில பெண் வாடிக்கையாளர்களைக் குறிவைத்து, சந்தேகிக்க இயலாத வகையில் குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு தெற்கு ஆஸ்திரேலியாவின் மாவட்ட நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டபோது, நீதிபதி "பாதிக்கப்பட்டவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாகவும், எதையும் சந்தேகிக்காதவர்களாகவும், பாதுகாப்பு மற்றும் மரியாதை கொண்டவர்களாகவும் இருந்தனர்” என்று கூறினார். "நீங்கள் அவர்களின் நம்பிக்கையை தவறாக பயன்படுத்தி, அவர்களை முற்றிலும் மரியாதையோ கண்ணியமோ இன்றி நடத்தி இருக்கிறீர்கள்" என குற்றம் சாட்டினார் நீதிபதி. மேலும் அந்த ஊழியரின் நடத்தை காலப்போக்கில் தீவிரமடைந்து அப்பட்டமாக மாறியதாகவும் தெரிவித்தார்.
மசாஜ் தெரபிஸ்ட் ரஸ்தோகி, இந்த குற்ற செயல்களுக்கு காரணம், “எனக்கு பிறர் அந்தரங்கத்தை பார்க்கும் மனநோய் உள்ளதாகவும் மற்றும் திருமண வாழ்வில் உள்ள சிக்கல்கள்” என்று கூறியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், அந்த நோயறிதல் அவரது நடத்தையை நியாயப்படுத்தாது என்றும், அவரால் தனது நடத்தையைக் கட்டுப்படுத்த முடியவில்லை அல்லது அது தவறு என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் நீதிபதி காட்டமாக கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களின் புகார் அறிக்கைகள் அவரை ஒரு “கொடுமைக்காரர்” மற்றும் “அருவருப்பானவர்” என்று விவரித்ததோடு, பல பெண்கள் தாங்கள் ஆரம்பத்தில் சங்கடமாக உணர்ந்ததாகவும், ஆனால் அந்தச் சம்பவங்களை உடனடியாகப் புகாரளிக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.