
கடலூரை சேர்ந்தவர் விஜய் (30). இவர் திருப்பூரில் பணியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். விஜயின் மனைவி கர்ப்பமாக இருந்து வந்தார். இதற்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார்.
அப்போது மருத்துவர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு சென்று மேல் சிகிச்சை பெறும் படி கூறி உள்ளனர். இதனால் விஜய் கோவை வந்து அரசு மருத்துவமனையில் அவரது மனைவியை பிரசவ வார்டில் அனுமதித்தார். அங்கே கடந்த சில நாட்களாக விஜய்யின் மனைவி மருத்துவம் பார்த்து வருகிறார். அதே வார்டில் கோவை சிங்காநல்லூர் நீலிகோணாம்பாளையம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (23) என்பவர் அவரது மனைவியையும் அனுமதித்து இருந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் விஜயுக்கும், விக்னேசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.
அப்போது விஜய், விக்னேசை தாக்கி உள்ளார். இதனால் விக்னேஷ், விஜய் மீது கோபத்தில் இருந்து வந்தார். இதற்கு இடையே விக்னேஷ் மனைவிக்கு குழந்தை பிறந்து வீடு திரும்பியுள்ளார்.
ஆனாலும் விக்னேசுக்கு, விஜய் மீது இருந்த ஆத்திரம் அடங்கவில்லை. நேற்று இரவு மது போதையில் அரசு மருத்துவமனைக்கு வந்த விக்னேஷ், விஜய்யிடம் பேச வேண்டும் எனக்கூறி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கோயில் அருகே அழைத்து சென்று உள்ளார்.
அங்கு விக்னேஷ், விஜயிடம் வெளியூரில் இருந்து வந்து என்னிடம் மோதுகிறாயா? என்று கூறி தகராறில் ஈடுபட்டு உள்ளார். ஒருகட்டத்தில் இந்த சண்டை முற்றியுள்ளது. அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து விஜயை சரமாரியாக குத்தியுள்ளார் விக்னேஷ். அதில் ரத்த வெள்ளத்தில் விஜய் சரிந்து விழுந்தார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கு இருந்தவர்கள் விஜயை மீட்டு சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தப்பி ஓட முயன்ற விக்னேசை அங்கு இருந்தவர்கள் பிடித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் விக்னேஷை கைது செய்தனர். விஜயின் உடலை பிரேத பரிசோதனைக்கு அங்கு உள்ள பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். மனைவியருக்கு பிரசவம் பார்க்க சென்ற இடத்தில் ஏற்பட்ட தகராறில் ஒரு நபர் கொலைசெய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.