Sankagiri POCSOசேலம் மாவட்டம், சங்ககிரி தாலுகாவைச் சேர்ந்தவர் 23 வயதுடைய ரஞ்சித், இவர் பெயிண்டிங் தொழில் செய்து வந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் ரஞ்சித் சிறுமியிடம் அவரை காதலிப்பதாக கூறி தொடர்ந்து பேசு வந்துள்ளார். சிறுமியும் ரஞ்சித்திடம் பேசி அடிக்கடி வெளியில் சென்று வந்ததாக சொல்லப்படும் நிலையில் இவர்களது காதல் குறித்து இரு வீட்டு பெற்றோருக்கும் தெரிய வந்துள்ளது.
இருவரின் பெற்றோரும் தொடர்ந்து காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கடந்த (ஜன 11) ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் ரஞ்சித் ஆசை வார்த்தை கூறி யாருக்கும் தெரியாமல் அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் இரு தரப்பு பெற்றோர்களும் ஏற்றுக்கொள்ளாததால் அதே பகுதியில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து இருவரும் வசித்து வந்தனர்.
இந்நிலையில் சிறுமிக்கு கடந்த சில வாரங்களாக உடல்நல குறைபாடு ஏற்பட்டுள்ளது. எனவே ரஞ்சித் சிறுமியை குமாரபாளையம் அரசு மருத்துவமனை அழைத்து சென்ற போது சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சிறுமியின் வயதை அறிந்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் இதுகுறித்து சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சங்ககிரி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் கார்த்திகேயினி 18 வயது பூர்த்தியை அடையாத சிறுமியை கடத்திச் சென்று ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கர்ப்பமாக்கிய ரஞ்சித் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், தகவலறிந்து ரஞ்சித் தப்பி சென்றுள்ளார். எனவே போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வருகின்றனர். சங்ககிரி அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய பெயிண்டிங் கூலித் தொழிலாளி மீது போக்சோ வழக்கு பாய்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.