

கள்ளக்குறிச்சி அருகே வாணியந்தல் கிராமத்தில் போதை தலைக்கேறிய நிலையில் தந்தையை மகன் மீன் வெட்டும் கத்தியால் வெட்டி கொலை - போலீசார் விசாரணை
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணியந்தல் கிராமத்தில் வசித்து வரும் சடையன் என்ற ராஜேந்திரன் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு மூன்று மகன் உள்ள நிலையில், அனைவரும் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். இதில் அவரது மூத்த மகன் ஐயப்பன் ஆவர். தந்தை ராஜேந்திரன் தனது வீட்டில் இருந்த போது, மதுபோதை தலைக்கேறிய நிலையில் வீட்டிற்கு வந்துள்ளார் ஐயப்பன். ராஜேந்திரனும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. தனக்கு உரிய சொத்தை தனக்கு பிரித்துத் தர வேண்டும் என்று தந்தை ராஜேந்திரனிடம் கேட்டுள்ளார் ஐயப்பன். அவர் மது போதையில் இருந்ததால் தந்தை அந்த பேச்சை தவிர்த்துள்ளார். மேலும் வாக்குவாதம் வேண்டாம் என்றும் அவரை கண்டித்துள்ளார். மதுபோதை தலைக்கேறிய நிலையில் தந்தை பேச்சை பொருட்படுத்தாமல், தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்திற்கு மேல் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மகன் ஐயப்பன், வீட்டில் மீன் வெட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த கத்தியை எடுத்து, பெற்ற தந்தை என்றும் பாராமல் அவரது கழுத்து மற்றும் முகப்பகுதியில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே தந்தை ராஜேந்திரன் துடிக்க துடிக்க உயிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த ராஜேந்திரன் (சடையன்) உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைதொடர்ந்து, இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மூத்த மகன் ஐயப்பனை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெற்ற தந்தை என்றும் பாராமல் சொத்துத் தகராறில் மது போதையில் மகனே தந்தையை வெட்டி கொலை செய்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.