கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பால்வார்த்துண்ணான் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மகன் 44 வயதுடைய பாலகிருஷ்ணன். அதேபோல், அண்ணாமலையின் சகோதரர் ராமச்சந்திரன் என்பவரின் மகன் 36 வயதுடைய ராமகிருஷ்ணன். சகோதரர்களான அண்ணாமலை மற்றும் ராமச்சந்திரனின் மகன்களான பாலகிருஷ்ணனும், ராமகிருஷ்ணனும் ஒரே கிராமத்தில் வசித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று இரவு இருவரும் வீட்டின் அருகே உள்ள வயலில் அமைந்துள்ள மோட்டார் கொட்டகைக்கு தண்ணீர் திறப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம கும்பல், இருவரையும் திடீரென வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.
கும்பலின் தாக்குதலில் இருவரும் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். பின்னர் அவர்களது அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் இருவரையும் மீட்டு சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவர்கள் பரிசோதித்த நிலையில் பாலகிருஷ்ணனும், ராமகிருஷ்ணனும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதற்கிடையே தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீசார் சம்பவம் நடைபெற்ற பால்வார்த்துண்ணான் கிராமத்திற்கு சென்று, சகோதரர்கள் வெட்டப்பட்ட இடம், அவர்களது வீடு உள்ளிட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லாவும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
முதற்கட்ட போலீஸ் விசாரணையில், அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கும், கொலை செய்யப்பட்ட சகோதரர்களுக்கும் இடையே நிலத்தகராறு தொடர்பாக நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்ததாக தெரியவந்துள்ளது. மேலும், இந்த நிலத்தகராறு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த முன்விரோதம் காரணமாகவே திட்டமிட்டு கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று தப்பியோடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
மேலும், சம்பவம் தொடர்பாக புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து உயிரிழந்த பாலகிருஷ்ணனின் உறவினர் கூறுகையில், கிராமத்தில் நிலத்தகராறு தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாகவும், அவர்கள்; மேல் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் போலீசார் விரைந்து கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். நிலத்தகராறு தொடர்பான முன்விரோதத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.