“கருகலைப்பால் உயிரிழந்த 17 வயது சிறுமி” - ஏழு மாதங்கள் வரை வீட்டில் மறைத்த மாணவி.. பெற்றோர்கள் கொடுத்த நாட்டு மருந்து!
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே அய்யலூரில் வசித்து வந்தவர் 17 வயது சிறுமி. இவர் திண்டுக்கல்லில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்த நிலையில் கர்ப்பமடைந்துள்ளார். இது குறித்து பெற்றோரிடம் சொன்னால் அடித்து விடுவார்கள் அல்லது கல்லூரியை விட்டு நிறுத்தி விடுவார்கள் என்று பயந்த மாணவி தனது பெற்றோர்கள் இடம் கர்ப்பமடைந்ததை தெரிவிக்காமல் இருந்துள்ளார். நாட்கள் கடக்க கடக்க மாணவியின் வயிறு பெரியதாக தொடங்கியுள்ளது.
மேலும் வழக்கமாக கர்ப்ப காலத்தில் ஏற்படும் உடல் சோர்வு, வாந்தி, மயக்கம் போன்றவை மாணவிக்கு ஏற்பட்ட நிலையில் இதுகுறித்து மாணவியின் தாய் அவரிடம் கேட்டுள்ளார். தொடர்ந்து பொய் சொல்லி சமாளித்து வந்த மாணவி ஒரு கட்டத்திற்கு பிறகு தான் கர்ப்பமாக இருக்கும் உண்மையை பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார். 32 வாரம் கிட்டத்தட்ட 7 மாதம் பின்பு பெற்றோர்களுக்கு இது குறித்து தெரிய வர அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மாணவியின் எதிர்காலத்தை நினைத்து அவரது கருவை கலைக்க முடிவு செய்தனர்.
அதன் படி ஏழு மாதங்களான நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றால் கருக்கலைப்பு செய்ய மாட்டார்கள். என எண்ணியவர்கள் நாட்டு மருந்தினை பயன்படுத்தி மாணவியின் கருவைக் கலைக்க நினைத்து மாணவிக்கு நாட்டு மருந்தினை கொடுத்துள்ளனர். அதை உண்ட மாணவிக்கு கருகலைந்த நிலையில் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிறுமி கடந்த 24ம் தேதி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள மகப்பேறு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த மாணவி இன்று (அக் 28) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த வடமதுரை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் கர்ப்பத்திற்கு யார் காரணம்? கருக்கலைப்பிற்கு பெற்றோர்கள் பயன்படுத்திய மருந்து குறித்த விவரம் போன்றவற்றை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . மேலும் மாணவி பயன்படுத்திய செல்போனை போலீசார் கைப்பற்றி கருவுற்றதற்கு காரணமானவர் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 17 வயது சிறுமி கரு கலைக்கப்பட்டதால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.
.png)
