“உயிருக்கு உயிராக பழகிய நண்பர்கள்” - தடம்மாறி சென்றதால் பிரிந்த நட்பு.. தம்பிக்காக இளைஞரை அடித்தே கொன்ற அண்ணன்கள்!

ஆகாஷ் விஜய்யை எதிரி போல நடத்த தொடங்கியுள்ளார். ஒருவருக்கு ஒருவர் சந்தித்துக் கொள்ளும் போதெல்லாம் இழிவாக பேசி வம்பிழுத்து உள்ளார்
“உயிருக்கு உயிராக பழகிய நண்பர்கள்” - தடம்மாறி சென்றதால் பிரிந்த நட்பு.. தம்பிக்காக இளைஞரை அடித்தே கொன்ற அண்ணன்கள்!
Published on
Updated on
2 min read

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கார்குடல் கிராமத்தை சேர்ந்தவர் 25 வயதுடைய ஆகாஷ். இவரும் அதே பகுதியை சேர்ந்த விஜய் என்பவரும் சிறு வயதில் இருந்து நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இருவரும் தங்களது பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திய நிலையில் கூலி தொழில் செய்து வந்துள்ளனர். இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வந்த நிலையில் ஆகாஷ் தடம் மாறி செல்ல தொடங்கியுள்ளார். வேறு சில நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு கஞ்சா விற்பது, நகை திருடுவது என குற்ற செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

எனவே விஜய்யின் வீட்டில் ஆகாஷுடன் பழக்க வேண்டாம் என பெற்றோர்கள் பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். அதே போல விஜய் ஆகாஷுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டுள்ளார். உயிருக்கு உயிராக பழகிய நண்பன் திடீரென்று தன்னுடன் பேசுவதை நிறுத்து விட்டதால் காரணம் புரியாமல் தவித்த ஆகாஷ் இது குறித்து விஜய்யை கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த விஜய் “உன்னுடைய பழக்க வழங்கங்கள் எதுவும் சரியில்லை நீ செய்து கொண்டிருப்பது எனக்கு புடிக்கவில்லை” என கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஆகாஷ் அவரது நண்பரை கடுமையாக பேசியுள்ளார்.

இந்த சம்பவம் நடந்ததில் இருந்து ஆகாஷ் விஜய்யை எதிரி போல நடத்த தொடங்கியுள்ளார். ஒருவருக்கு ஒருவர் சந்தித்துக் கொள்ளும் போதெல்லாம் இழிவாக பேசி வம்பிழுத்து உள்ளார். ஆனால் இதனை பெரிதாக எடுத்து கொள்ளாத விஜய் பிரச்சனை வேண்டாம் என விலகி சென்றுள்ளார். சமீபத்தில் அவர்கள் ஊரில் நடந்த கோவில் திருவிழாவின் போது விஜய் தனது நண்பர்களுடன் சேர்ந்து பேனர் வைத்துள்ளார். அந்த பேனரை எடுக்க சொல்லி ஆகாஷ் தகராறு செய்ததால் பேனரை எடுத்துக் கொண்டு விஜய் தனது நண்பர்களுடன் சென்றதாக சொல்லப்படுகிறது.

இதனை தொடர்ந்து தனது உறவினரை சந்திக்க விஜய் ஆகாஷ் வீட்டின் வழியே சென்று கொடிருந்துள்ளார். அப்போது மது போதையில் இருந்த ஆகாஷ் மீண்டும் விஜய்யை வம்பிழுத்து தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இதனால் கோபமடைந்த விஜய் நடந்ததை பற்றி தனது அண்ணன்கள் வசந்த ராஜா, அஜித்குமார் மற்றும் நண்பரான சூர்யாவிடம் தெரிவித்துள்ளார். இதை கேட்டு ஆத்திரமடைந்த மூவரும் ஆகாஷ் வீட்டிற்கு சென்றுள்ளனர் அங்கு ஆகாஷ் இல்லாத நிலையில் அவரது பெற்றோர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர்.

பின்னர் வீட்டிற்கு வந்த ஆகாஷ் விஜய் தரப்பினர் வந்து பெற்றோர்களிடம் வாக்குவாதம் செய்ததை அறிந்து கொண்டு அரிவாளுடன் விஜய் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தெரு முனையில் இருந்த வசந்த ராஜா, அஜித்குமார் மற்றும் சூர்யாவை ஆகாஷ் தான் எடுத்து சென்ற அரிவாளால் தாக்கியுள்ளார். இதில் சுதாரித்து கொண்ட வசந்த ராஜா ஆகாஷை தாக்கி கீழே தள்ளியுள்ளார். இதையடுத்து மூவரும் சேர்ந்து ஆகாஷை சரமாரியாக தாக்கி விட்டு தப்பித்து சென்றுள்ளனர். இதில் ஆகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆகாஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நண்பர்களாக இருந்தவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனையால் ஒருவர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com