பெங்களூருவில் 74 வயதுடைய ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவரிடம், 'டிஜிட்டல் அரெஸ்ட்' என்ற பெயரில் 24 கோடி ரூபாயை மோசடி செய்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிரடித் தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடக மாநில சைபர் கிரைம் பிரிவு மேற்கொண்ட விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் மீது ஏற்கனவே நாடு முழுவதும் பல சைபர் மோசடி வழக்குகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, பெல்காவியில் நடந்த 15 கோடி ரூபாய் மோசடி வழக்கிலும் இவர்களுக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. தமிழகம், குஜராத், பீகார் மற்றும் டெல்லி எனப் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 6 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு சைபர் கிரைம் போலீஸ் கொடுத்த தகவலின் அடிப்படையில், பெல்காவி போலீசார் அந்த மோசடி கும்பலைச் சேர்ந்த இருவரைத் தங்களது காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். மேலும் விசாரணையில், கைது செய்யப்பட்ட நபர்களில் ஒருவர் நான்கு வழக்குகளிலும், மற்றொருவர் மூன்று தனித்தனி சைபர் குற்ற வழக்குகளிலும் சிக்கியிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இவர்கள் அனைவரும் தனித்தனியாகச் செயல்படாமல், மாநிலங்களுக்கு இடையே இயங்கும் ஒரு மிகப்பெரிய மோசடி கும்பலாகச் செயல்பட்டு வந்துள்ளனர். போலி கணக்குகள் மூலம் பணத்தை மாற்றியதும், கறுப்புப் பணத்தை வெண்மையாக்கியதும் இவர்களின் வேலையாக இருந்துள்ளது.
இந்த மோசடி கும்பல், அந்த ஓய்வு பெற்ற ஆசிரியையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, அவரை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் என்று கூறி மிரட்டியுள்ளனர். பணமோசடி வழக்கில் உனக்குத் தொடர்பு இருக்கிறது என்று பொய் சொல்லி, அவரை வாரக்கணக்கில் 'டிஜிட்டல் சிறையில்' வைத்திருந்தனர். இந்த பயத்தைப் பயன்படுத்தி, பிப்ரவரி 10 முதல் ஏப்ரல் 24 வரையிலான காலத்தில், 26 முறை பரிவர்த்தனைகள் மூலம் சுமார் 24 கோடி ரூபாயைத் தங்களுக்குத் தெரிந்த 23 வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்ற வைத்துள்ளனர்.
இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்ததே ஒரு சுவாரஸ்யமான தருணத்தில்தான். அந்த ஆசிரியை மேலும் பணம் தேவைப்பட்டு, தனது ஒரு கிலோ தங்கத்தை அடகு வைக்க வங்கிக்குச் சென்றபோதுதான், வங்கி மேலாளருக்குச் சந்தேகம் வந்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தார். அந்த வங்கி மேலாளரின் சமயோசிதமான தலையீடு இல்லையென்றால், அந்த ஆசிரியை மேலும் 3 கோடி ரூபாயை இழந்திருப்பார். இந்த மோசடி கும்பல் இதுவரை பணத்தை அள்ளிச் சென்றாலும், போலீசார் தற்போது 1.46 கோடி ரூபாயை மீட்டுள்ளனர். மேலும் 1.40 கோடி ரூபாயை மீட்கும் பணிகள் நடக்கின்றன.
தேசிய சைபர் கிரைம் போர்ட்டல் மூலம் இவர்களுடைய பல வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதால், சுமார் 4 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி கும்பல் கைகளுக்குப் போவது தடுக்கப்பட்டுள்ளது. இந்த நெட்வொர்க்கில் இன்னும் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள், மாநிலங்களுக்கு இடையே பணம் எப்படிப் பரிமாறப்படுகிறது என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மீதமுள்ள பணத்தை மீட்பதற்கும், சம்பந்தப்பட்ட மற்ற குற்றவாளிகளைப் பிடிப்பதற்கும் தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.