தருமபுரி மாவட்டம், பிடமனேரி பகுதியைச் சேர்ந்த 48 வயதான நபிஷா, அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். தினமும் பள்ளி மாணவர்களை ஆட்டோவில் அழைத்துச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது ஆட்டோவில் வழக்கமாக பயணம் செய்து வந்த 13 வயது அரசு பள்ளி மாணவியிடம் நபிஷா தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவி ஆட்டோவில் பயணம் செய்தபோது, அவரிடம் நபிஷா பாலியல் ரீதியாக சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, மாணவியிடம் காதல் கடிதம் ஒன்றையும் நபிஷா கொடுத்ததாக தெரிகிறது. அந்தக் கடிதத்தை மாணவி திறந்து பார்த்தபோது, அதில் ஆபாசமான மற்றும் தகாத வார்த்தைகள் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, நடந்த சம்பவம் குறித்து தனது பள்ளி ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார். மாணவியின் புகாரைத் தொடர்ந்து, ஆசிரியர் குழந்தைகள் உதவி மையத்தின் 1098 எண்ணுக்கு தகவல் அளித்துள்ளார்.
இதையடுத்து, மாவட்ட குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் மாணவியை நேரில் சந்தித்து விசாரணை நடத்தினர். அப்போது, ஆட்டோவில் பயணம் செய்தபோது நபிஷா தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், ஆபாசமான வார்த்தைகள் அடங்கிய கடிதத்தை வழங்கியதாகவும் மாணவி தெரிவித்ததாக கூறப்படுகிறது. மாணவியின் புகாரின் அடிப்படையில் தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நபிஷா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் நபிஷாவை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டார். பள்ளி மாணவர்களை தினமும் அழைத்துச் செல்லும் பணியில் இருந்த ஆட்டோ ஓட்டுநர், 13 வயது மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.