

ஈரோட்டில் பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய சித்தப்பாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த சரவணன் (44) என்பவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவருக்கு 2 மகன்களும் உள்ளனர். இவரது அண்ணன் மகளான பிளஸ் 2 படித்து வந்த 17 வயது சிறுமி, அவ்வப்போது சித்தப்பாவின் மகன்களை பார்த்து கொள்ள வீட்டுக்கு வந்து செல்வார். கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் 9-ம் தேதி சரவணன் வீட்டிற்கு வந்தபோது, சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி.. கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதையடுத்து கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதியும் அந்த பெண்ணை பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதன்மூலம் சிறுமி கர்ப்பமாகியுள்ளார், இதுகுறித்து பவானி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்சோ பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சரவணனை கைது செய்துள்ளது காவல்துறை. அவரை சிறையில் அடைத்து இதுகுறித்து ஈரோடு மகிளா விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில், வழக்கில் இறுதி விசாரணை நடத்தி ஈரோடு மகிளா நீதிமன்ற நீதிபதி சொர்ணகுமார் தீர்ப்பளித்தார். அதில், குற்றவாளியான சரவணனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 3 மாதம் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என கூறினார். மேலும், பாலியல் குற்றத்தால் உடல் மற்றும் மனரீதியாக பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரண தொகையாக ரூ.3 லட்சத்து 85 ஆயிரத்தை வழங்கிட தமிழ்நாடு அரசுக்கு நீதிபதி சொர்ணகுமார் பரிந்துரைத்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்