

நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே மேல இழந்தகுளம் பகுதியில் 4 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், திருச்சபை பங்குத்தந்தைக்கு மரண தண்டனை விதித்து நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேல இழந்தகுளம் பகுதியில் உள்ள திருச்சபையில் பங்குத்தந்தையாக பணியாற்றி வந்தவர் ஆபிரகாம் (47). கடந்த 2022ஆம் ஆண்டு திருச்சபைக்கு வந்த 4 சிறுமிகளை அவர் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிர்ச்சி புகார் வெளிவந்தது. மேலும், இது குறித்து வெளியே யாரிடமும் தெரிவிக்கக்கூடாது என்றும், அவ்வாறு தெரிவித்தால் சிறுமிகளை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமிகள் அளித்த புகாரின் அடிப்படையில் தேவர்குளம் போலீசார் விசாரணையை தொடங்கினர். தொடர்ந்து, பங்குத்தந்தை ஆபிரகாம் கைது செய்யப்பட்டார். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் பல்வேறு கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கு நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணையின்போது, போலீசார் சேகரித்த ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அரசு தரப்பில் வழக்கறிஞர் உஷா ஆஜராகி, குற்றச்சாட்டுகள் தொடர்பாக விரிவாக வாதிட்டார். வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், பங்குத்தந்தை ஆபிரகாம் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ் குமார், 4 சிறுமிகளுக்கு எதிராக பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஆபிரகாமிற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு ஆணையிட்டுள்ளது.
சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதுடன், சம்பவத்தை வெளியே தெரிவிக்கக் கூடாது என மிரட்டியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளும் வழக்கில் முக்கியத்துவம் பெற்றன. சிறுமிகளின் பாதுகாப்பு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பது தொடர்பாக இந்த வழக்கு கவனம் பெற்றிருந்த நிலையில், தற்போது நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சபை பங்குத்தந்தைக்கு போக்சோ வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் மேல இழந்தகுளம் மட்டுமின்றி நெல்லை மாவட்டத்திலும் பேசுபொருளாகியுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து எழுந்து வரும் நிலையில், இந்த தீர்ப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்