

குஜராத் மாநிலம் சூரத் அருகே உள்ள நவசாரி மாவட்டத்தில், தனது 14 வயது மகளை நீண்ட காலமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 43 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொடூர சம்பவம், பாதிக்கப்பட்ட சிறுமி தனது உறவினர் ஒருவரிடம் மனம் திறந்து கூறியதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதன்பின், அந்த உறவினர் சிறுமியின் தாயாரிடம் தகவல் தெரிவிக்க, அவர் உடனடியாக காவல்துறையை அணுகி புகார் அளித்தார். சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் காந்தேவி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்துள்ளனர். அவர் மீது பாரதிய நியாய சம்ஹிதா (BNS) மற்றும் குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
காவல்துறை விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தனது மகளை தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்தது தெரியவந்துள்ளது. குறிப்பாக, இந்த ஆண்டு மே மாதம் 9, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில், சிறுமியின் தாய் வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில், வீட்டில் தனியாக இருந்த சிறுமியை அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமி நீண்ட காலமாக இந்தச் சம்பவத்தை யாரிடமும் தெரிவிக்காமல் இருந்ததற்கு காரணம், தந்தை தொடர்ந்து மிரட்டி வந்ததே என விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் அச்சத்தில் இருந்த சிறுமி, சமீபத்தில் தனது உறவினரிடம் நடந்ததை பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் பாலியல் வன்கொடுமைக்கு பிறகு சிறுமிக்கு கருத்தடை மாத்திரையும் வழங்கியுள்ளார்.
மேலும், குற்றம் சாட்டப்பட்டவர் முன்பு ஒரு நிறுவனத்தில் தையல்காரராக பணிபுரிவதற்காக ஆப்பிரிக்கா சென்றிருந்தார். 2024-ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய பிறகே இந்த பாலியல் துன்புறுத்தல் தொடங்கியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தற்போது அவர் வீட்டிலிருந்தே தையல் தொழில் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர் தனது செல்போனில் அடிக்கடி ஆபாச காணொளிகள் மற்றும் உள்ளடக்கங்களை பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவரது கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் ஆய்வுக்காக அனுப்பப்பட உள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து தேவையான தடயவியல் மாதிரிகளை சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்