

நியூ ஜெர்சியின் கேம்டன் நகரில் ஐந்து நாட்கள் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு, ஜூலை 17 அன்று குழந்தைகளை பாலியல் ரீதியாக சுரண்டிய குற்றத்திற்காக முன்னாள் விமானப்படை கேப்டன் ஒருவரை நடுவர் குழு குற்றவாளி எனத் தீர்ப்பளித்ததை அடுத்து, அவருக்கு 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை, 500,000 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
நியூ ஜெர்சி மாவட்டத்திற்கான அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, நியூ ஜெர்சியின் ஈஸ்டாம்ப்டனைச் சேர்ந்த 31 வயதான கேப்ரியல் பெரெஸ் என்ற கேப்டன், ஒரு சிறுமியை ஆசை வார்த்தைக்கூறி பாலியல் உறவிற்கு அழைத்ததும் மற்றும் அந்த சிறுமிக்கு ஆபாசமான பொருட்களை அனுப்ப முயன்றது ஆகிய குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டுள்ளார். இந்த குற்றத்தை வெளியே கொண்டுவருவதற்காக, 14 வயது சிறுமியாக நடித்த ஒரு ரகசிய சட்ட அமலாக்க அதிகாரி சமூக ஊடகங்களில் மேற்கொண்ட இணையவழித் தொடர்புகளிலிருந்து இந்தக் குற்றச்சாட்டுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
மேலும், ஆகஸ்ட் 2024-ல், அப்போது 29 வயதான பெரெஸ், 14 வயது சிறுமியாக நடித்த ரகசிய அதிகாரியுடன் தொடர்பு கொண்டதாக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அந்தச் சிறுமியின் வயதை (அதிகாரி) அறிந்த 24 மணி நேரத்திற்குள், பெரெஸ் அவருடன் பாலியல் உறவு கொள்ள விருப்பம் தெரிவித்ததோடு, தனது ஆபாசமான புகைப்படம் ஒன்றையும் அவருக்கு அனுப்பியதாக அந்தச் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஆகஸ்ட் 29, 2024 அன்று, பெரெஸ் தனது சட்டைப்பையில் ஆணுறைகளுடன் அந்த சிறுமியுடன் (அதிகாரி) முன்னரே ஏற்பாடு செய்யப்பட்ட இடத்திற்கு காரில் சென்றுள்ளார். அப்போது சட்ட அமலாக்க அதிகாரிகளால் சுற்றிவளைத்து கைது செய்யப்பட்டார் என்று அந்த செய்திக்குறிப்பு கூறுகின்றது. இந்த நடவடிக்கைக்காக அமெரிக்க வழக்கறிஞர் ராபர்ட் ஃப்ரேசர், விமானப்படை சிறப்புப் புலனாய்வு அலுவலகத்தின் முகவர்களைப் பாராட்டியுள்ளார். மேலும் இந்த விசாரணையில் உதவியதற்காக பர்லிங்டன் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகத்திற்கும், ஈஸ்டாம்ப்டன் காவல் துறைக்கும் நன்றி தெரிவித்துள்ளார். பெரெஸுக்கான தண்டனைத் தீர்ப்பு வரும் டிசம்பர் 9 அன்று வழங்கப்பட உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்