கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டம் பெலகாவியில் வசித்து வருபவர் லட்சுமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் அரசாங்க ஊழியராக பணியாற்றி வரும் நிலையில் வீட்டில் உள்ள மற்ற வேலைகளை பார்த்துக் கொள்ள பணிப்பெண் வைத்திருக்கிறார். தினமும் காலை வேலைக்கு செல்லும் லட்சுமி வீட்டை பூட்டிவிட்டு சாவியை ஜன்னல் அருகே வைத்து விட்டு செல்லும் நிலையில் பணிப்பெண் அந்த சாவியை எடுத்து வேலைகளை முடித்து விட்டு மீண்டும் வீட்டை பூட்டி சாவியை அதே இடத்தில் வைத்து செல்வது வழக்கமாக இருந்துள்ளது.
இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு லட்சுமிக்கு போன் செய்த ஒரு கும்பல் “உனது அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் எங்களிடம் உள்ளது, நாங்கள் அதை வெளியில் விடாமல் இருக்க நீ 50 லட்சம் பணம் தர வேண்டும் என மிரட்டி இருக்கின்றனர்” மேலும் லட்சுமியின் அந்தரங்க வீடியோக்களை அவரது எண்ணுக்கு அனுப்பி வைத்து நெருக்கடி கொடுத்திருக்கின்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த லட்சுமி இது குறித்த ரகசிய தகவலை போலீஸ் கமிஷனரிடம் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் லட்சுமிக்கு போன் வந்த மொபைல் எண்ணை டிராக் செய்து கோகாக் பகுதியை சேர்ந்த சமீர் நிசார் அகமது ஷேக், அப்துல் ரஷீத் மகந்தர் மற்றும் முகமது பலேகுந்த்ரி ஆகியோரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் லட்சுமி வீட்டில் பணிபுரியும் பணிப்பெண்ணின் உதவியுடன் குற்றவாளிகள் லட்சுமியின் வீட்டில் உள்ள பல்பு ஓல்டர்களில் ரகசிய கேமரா வைத்து லட்சுமியின் அந்தரங்கங்களை படம் பிடித்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த இரண்டு சாம்சங் அல்ட்ரா மொபைல்கள், ஒரு விவோ மொபைல், 64 ஜிபி பென்டிரைவ், ஆறு மறைத்து வைத்திருந்த கேமராக்கள், இரண்டு ஓடிஜி சாதனங்கள், பல மெமரி கார்டுகள் மற்றும் ஒரு இன்னோவா கிரிஸ்டா கார் ஆகியவற்றை பறிமுதல் செய்திருக்கின்றனர். அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பென்டிரைவ் மற்றும் மெமரி கார்டுகளில் மேலும் பல பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கில் பெண் அதிகாரியின் வீட்டு வேலை செய்யும் பெண்ணின் பங்கும் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில் அவரை மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர். வீட்டில் கேமரா வைத்து அந்தரங்க புகைப்படங்களை எடுத்து அதை காட்டி பெண் அதிகாரி பணத்திற்காக மிரட்டப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.