திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த சானாபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயதுடைய ரஞ்சன். பிளஸ் 2 முடித்திருந்த இவர், சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் சேர்வதற்காக விண்ணப்பித்திருந்ததாக கூறப்படுகிறது. கடந்த மாதம், அருகிலுள்ள தொழிற்சாலையில் சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான இரும்புப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில் 11 பேருடன் சேர்த்து ரஞ்சனும் கைது செய்யப்பட்டார். 17 வயது சிறுவன் என்பதால் நீதிமன்றத்தில் ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார். இந்நிலையில், நேற்று இரவு வீட்டில் இருந்த ரஞ்சனை அவரது நண்பர்கள் சிலர் வெளியே அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அவர் வீடு திரும்பாததால், பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை தேடி வந்தனர்.
அப்போது, ஊருக்கு வெளியே வயல்வெளியை ஒட்டியுள்ள கல்லறை பகுதியில் ரஞ்சன் ரத்தக்காயங்களுடன் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், இதுகுறித்து உடனடியாக பாதிரிவேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், ரஞ்சனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். ஊருக்குள் மற்றும் முக்கிய சாலைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரணீத் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
இதற்கிடையே, கொலை தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் சில இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அதே கிராமத்தைச் சேர்ந்த காமேஷ் என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முக்கிய தகவல்கள் வெளியாகின. காமேஷ் கடந்த ஆண்டு அம்பத்தூரைச் சேர்ந்த இளம்பெண்ணை இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. திருமணத்தை பின்னர் பெண்ணின் பெற்றோர் ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து, காமேஷ் தனது மனைவியுடன் அம்பத்தூரில் வசித்து வந்துள்ளார். அவ்வப்போது சானாபுத்தூரில் உள்ள சொந்த ஊருக்கு வந்து சென்றதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த காமேஷிடம், ரஞ்சன் தன்னிடம் இருந்த கத்தியை வீட்டிற்கு எடுத்துச் செல்ல பயமாக இருப்பதாகக் கூறி கொடுத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. மீண்டும் நேற்று முன்தினம் இரவு இருவரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது, காமேஷின் மனைவியின் நடத்தை குறித்து ரஞ்சன் “உன் பொண்டாட்டி சரி இல்ல டா மச்சான்” என கூறி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த காமேஷ், தனது மனைவி குறித்து பேச வேண்டாம் என எச்சரித்துள்ளார். ஆனால், மதுபோதையில் ரஞ்சன் தொடர்ந்து தரக்குறைவாக பேசியதாக கூறப்படும் நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த காமேஷ், ரஞ்சன் தன்னிடம் கொடுத்து வைத்திருந்த அதே கத்தியைக் கொண்டு அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் ரஞ்சனின் உடலை கல்லறை பகுதியில் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து காமேஷை கைது செய்த பாதிரிவேடு போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். நண்பனின் மனைவி குறித்து அவதூறாக பேசியதாகக் கூறி 17 வயது இளைஞர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு, கல்லறை மீது சடலமாக கிடந்த சம்பவம் சானாபுத்தூர் கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்