ஹரியானா மாநிலம், ரேவாரி மாவட்டம் ஜட்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் 21 வயதுடைய மோனு. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தன்னு என்ற பெண்ணுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று ஒரு குழந்தை உள்ளது. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த மோனு கடந்த ஜூன் 8-ஆம் தேதி மாலை மருந்து வாங்குவதற்காக ஸ்கூட்டரில் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது தந்தை ரத்தன்லால் கசௌலா காவல் நிலையத்தில் தனது மகனை காணவில்லை என்றும், எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்றும் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் ஜூன் 10-ஆம் தேதி அசல்வாஸ் கிராமம் அருகே உள்ள கால்வாயில் மோனு சடலமாக மீட்கப்பட்டார் . அவரது உடலில் வெளிப்படையான காயங்கள் எதுவும் இல்லாததுடன், அவர் கடைசியாக சென்ற அவரது ஸ்கூட்டியும் கால்வாய் கரையில் நிறுத்தப்பட்டிருந்ததால், முதலில் இது விபத்து அல்லது தற்கொலை என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினர். ஆனால், இறுதிச் சடங்கின்போது மோனுவின் மனைவி தன்னுவின் நடவடிக்கைகள் குடும்பத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி, தன்னுவின் செல்போனை ஆய்வு செய்தனர்.
அப்போது, கணவர் மோனு காணாமல் போன இரவில் தன்னு, சோனு என்ற வாலிபருடன் பலமுறை தொடர்ந்து செல்போனில் பேசியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், தன்னுவிற்கு அதே பகுதியை சேர்ந்த சோனுவுடன் திருமணத்திற்கு மீறிய உறவும் இருந்ததும், இதனால் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ததும் தெரியவந்தது. போலீசாரின் தகவலின்படி, கணவனை கொலை செய்த திட்டமிட்ட தன்னு, மோனுவை கசௌலா பகுதிக்கு வரவழைத்துள்ளார். அங்கு ஏற்கனவே காத்திருந்த சோனு மற்றும் அவரது கூட்டாளிகளான ஹரியோம், அமன் உள்ளிட்டோர், மோனுவின் வாய் மற்றும் மூக்கை அழுத்தி மயக்கமடையச் செய்து கொலை செய்து அவரை கால்வாயில் வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில், கடந்த (ஜூலை 02) ஆம் தேதி மோனுவின் மனைவி தன்னு மற்றும் சோனுவின் கூட்டாளியான ஹரியோம் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான சோனு மற்றும் கொலையில் தொடர்புடைய மற்ற நபர்களை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மோனுவும் தன்னுவும் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நிலையில் பொருளாதார சிக்கல் காரணமாக மோனு, ராஜஸ்தானில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி குடும்பத்தை கவனித்து வந்துள்ளார். எனவே வீட்டில் தனியாக இருந்த தன்னு மோனு குடும்பத்தை தவிர்த்து தாய் வீட்டில் வசித்து வந்ததாக சொல்லப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.