

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே இளையநகரம் ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி ரம்யா. இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில், இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர். விவசாய வேலை பார்த்து வந்த குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. குமார் தினந்தோறும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு வழக்கம் போல் மதுபோதையில் வீட்டிற்கு வந்த குமார், மனைவி ரம்யாவுடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரம்யா, வீட்டில் இருந்த கத்தியால் குமாரின் கழுத்தில் வெட்டி கொலை செய்துள்ளார். இதில் படுகாயமடைந்த குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். சம்பவத்தைத் தொடர்ந்து ரம்யா வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்திற்கு நேரில் சென்று நடந்த சம்பவத்தை கூறி சரணடைந்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் மகாலட்சுமி தலைமையிலான கிராமிய காவல்துறையினர் விரைந்து சென்று குமாரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தகவலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்ஷய் அனில் வாகரே சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். மது போதையில் கணவன்–மனைவி இடையே ஏற்பட்ட தகராறில், மனைவியே கணவரை கத்தியால் வெட்டிக் கொலை செய்து காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் வாணியம்பாடி பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்