

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த போடிபட்டியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் (33). இவர் முனைவர் பட்டப்படிப்புக்காக கடந்த 2023-ம் ஆண்டு தைவான் சென்றுள்ளார். அங்கு ஒரு 'டேட்டிங் செயலி' மூலம் தைச்சுங் நகரைச் சேர்ந்த ஜோயிங்யிங் (35) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதாக கூறப்படுகிறது.
ஜெகதீஷ் படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து கொள்வதாக அந்த பெண்ணிடம் உறுதியளித்ததாகவும், இதனை நம்பிய அந்த பெண் அவரது படிப்பு, தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் நிதி உதவி அளித்து உதவியதாகவும் கூறப்படுகிறது. இருவரும் ஒன்றாக (லீவ் இன் முறையில்) வசித்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் ஜெகதீஷ் இந்தியா திரும்பியுள்ளார்.
பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேசி மீண்டும் தைவானுக்கு வந்து ஜோயிங்யிங் என்ற அவரது காதலியை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்துள்ளார். இதனையடுத்து, சில மாதங்களாக அந்த பெண்ணுடனான தொடர்பை ஜெகதீஷ் முற்றிலுமாக துண்டித்ததாக கூறப்படுகிறது. கடந்த ஐந்து மாதங்களாக ஜெகதீஷை, ஜோயிங்யிங் தொடர்பு கொள்ள முயன்றும் முடியாததால், ஜோயிங்யிங் உடுமலையைச் சேர்ந்த வழக்கறிஞர் உதவியுடன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தைவானை சேர்ந்த ஜோயிங்யிங் என்ற பெண்ணின் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், ஜெகதீஷ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் டைத்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக உடுமலை வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்