கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள மீனவ கிராமத்தை சேர்ந்தவர ராபர்ட் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவருக்கு திருமணமாகி 11 வயதில் மகள் உள்ளார். ராபர்ட் மீன்பிடி தொழில் செய்து வரும் நிலையில் விசைப்படகுகளை வாடகைக்கு விடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். எனவே தூத்துக்குடி திரேஷ்புரம் பகுதியை சேர்ந்த 44 வயதான அலெக்ஸ் என்பவர் அம்மாண்டிவிளை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி ராபர்ட் இடம் விசைப்படகை வாடகைக்கு எடுத்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
ராபர்ட்டுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் குறைவு ஏற்பட்ட போது அலெக்ஸ் அவரது வீட்டிற்கு சென்று உதவியாக இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. எனவே இவர்களுக்கு நல்ல நட்பு ஏற்பட்டு அலெக்ஸ் அடிக்கடி ராபர்ட் வீட்டிற்கு சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று ராபர்ட் மீன் பிடிக்க கடலுக்கு சென்றிருந்த நிலையில் அவரது மனைவியும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க கடைக்கு சென்றிருக்கிறார்.
அப்போது ராபர்ட் வீட்டிற்கு சென்ற அலெக்ஸ் வீட்டில் யாருமில்லாததை அறிந்துகொண்டு வீட்டில் தனியாக இருந்த 11 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளார். பின்னர் அச்சமடைந்த சிறுமி சத்தம் போடவே அலெக்ஸ் அங்கிருந்து தப்பி செல்ல சிறுமி அழுது கொண்டே பக்கத்து வீட்டை சேர்ந்த உறவுக்கார பெண் ஒருவரிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்திருக்கிறார். இதனை தொடர்ந்து உறவுக்கார பெண் இது குறித்து சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
தகவலறிந்து வந்த சிறுமியின் தாயார் சம்பவம் குறித்து குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். எனவே வழக்குப்பதிவு செய்த போலீசார் வீட்டிற்குள் புகுந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற அலெக்ஸ் மீது போக்சோ உள்ளிட்ட முன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து குளச்சல் அனைத்து மகளிர் போலீஸார் அவரை கைது செய்து சிறையிலடைத்தனர். வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் தந்தையின் நண்பரே அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.