

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வாகையடி கோட்டார் வடக்கு தெருவை சேர்ந்த செந்தில் குமார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வரும் நிலையில் அதே பகுதியை சேர்ந்த 25 வயதுடைய சந்தியா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். பின்னர் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நிலையில் வாகையடியில் தனியாக வசித்து வருகின்றனர்.
இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் செந்தில்குமார் மற்றும் சந்தியா தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே செந்தில்குமாருக்கு அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி அடிக்கடி வெளியில் ஊர் சுற்றி வந்ததாக சொல்லப்படுகிறது.
இதனை அறிந்த சந்தியா செந்தில் குமாரிடம் அவரது கள்ளக்காதல் குறித்து கேட்டுள்ளார். இதன் காரணமாக அடிக்கடி சந்தியாவுக்கு செந்தில் குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனை அறிந்த செந்தில் குமாரின் உறவினர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி வாழ வைத்ததாக சொல்லப்படுகிறது. இருப்பினும் செந்தில் குமார் மற்றொரு பெண்ணுடனான உறவை கைவிடாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
எனவே மீண்டும் கணவன் மனைவி இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்ட போது செந்தில் குமார் “நான் எத்தனை பொண்ணு கூட வேணாலும் பழகுவேன் அதை நீ கேட்கக்கூடாது” என சந்தியாவை அடித்து துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது இதனால் மன உளைச்சல் அடைந்த சந்தியா கடந்த (டிச 31) ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த கோட்டார் போலீஸ்சார் சந்தியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சந்தியாவின் தாயார் சிந்து அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நாகர்கோவில் ஆர்.டி ஓ காளீஸ்வரி மற்றும் டவுன் டிஎஸ்பி சிவசங்கரன் ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே தற்கொலைக்கு காரணமாக இருந்த சந்தியாவின் கணவர் செந்தில் குமாரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.