காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி ஜீவா நகரைச் சேர்ந்தவர் 22 வயதுடைய பெண் கலை அமுது. இவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நாளடைவில் இந்த பழக்கம் நெருக்கமாக மாறிய நிலையில், கலை அமுது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, அவரை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு அந்த சிறுமி திடீரென வீட்டில் இருந்து மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், காரைக்கால் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை தீவிரமாக தேடி விசாரணை நடத்தினர்.விசாரணையில், கலைஅமுது சிறுமியை சென்னைக்கு அழைத்துச் சென்று, அவருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், இந்த சம்பவத்திற்கு காரைக்கால் லெமர் வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய கணேசன் உடந்தையாக இருந்ததுடன், அவரும் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சிறுமியை மீட்ட போலீசார் கலைஅமுது மற்றும் கணேசன் ஆகிய இருவரையும் போலீசார் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு காரைக்கால் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அனைத்து தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி மோகன் நேற்று தீர்ப்பளித்தார். அதன்படி, சிறுமியை கடத்தி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட கலைஅமுதுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், உடந்தையாக இருந்து சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கணேசனுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, தண்டனை பெற்ற இருவரும் புதுச்சேரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி 17 வயது சிறுமியை கடத்திச் சென்று ஓரின சேர்க்கை மற்றும் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட வழக்கில் இளம்பெண்ணுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது காரைக்காலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.