கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த ஜமுக்குட்டபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் 45 வயதுடைய சத்தியசீலன். விவசாயியான இவர் அந்த ஊரின் கவுண்டராகவும், காங்கிரஸ் பிரமுகராகவும் செல்வாக்குடன் இருந்து வந்தார். கடந்த (மே 7) ஆம் தேதி வெளியே சென்ற சத்தியசீலன் மீண்டும் வீடு திரும்பவில்லை. மறுநாள் காலை, கரடியூர் கோடி பகுதியில் உள்ள அவரது விவசாய நிலத்தில், தலை நசுங்கிய நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார்.
தகவலறிந்த சேலம் சரக டி.ஐ.ஜி சந்தோஷ் ஹாடிமணி, மாவட்ட எஸ்.பி. தங்கதுறை மற்றும் பர்கூர் டி.எஸ்.பி தனசேகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். கொலை நடந்த இடத்தில் போலீசார் ஆய்வு செய்த போது, அங்கிருந்த கல் பெஞ்சில் ஒரு மது பாட்டில் ஸ்டிக்கர் ஒட்டி இருந்தது. அந்த தடயத்தை வைத்து, அருகிலுள்ள டாஸ்மாக் கடையில் விசாரித்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் மது வாங்கியது உறுதியானது. மேலும், கோவிந்தன் என்பவர் சிக்கன் மற்றும் மல்லிகைப் பூ வாங்கி வந்து சத்தியசீலனிடம் கொடுத்ததும் தெரியவந்தது.
இதன் அடிப்படையில் ராமகிருஷ்ணனை பிடித்து போலீசார் நடத்திய ‘கிடுக்குப்பிடி’ விசாரணையில், கொலைக்கான பகீர் காரணங்கள் வெளியாகின. வெப்பாலம் பட்டியிலிருந்து போச்சம்பள்ளி துணை மின் நிலையத்திற்கு வரும் சோலார் மின் இணைப்பிற்காக விளைநிலங்களில் மின்கம்பங்கள் நடப்பட்டன. இதற்கான நில இழப்பீடு தொகையை ஒரு தனியார் நிறுவனம் சத்தியசீலன் இடம் வழங்கிய நிலையில், அதில் கமிஷன் தொகையாக 7 லட்சம் ரூபாய் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
இந்தத் தொகையை சத்தியசீலன், ராமகிருஷ்ணன், காசி மற்றும் கோவிந்தசாமி ஆகியோர் பிரித்துக்கொள்ள திட்டமிட்டனர். ஆனால், கோவிந்தசாமிக்கு மட்டும் ஒரு லட்சம் கொடுத்துவிட்டு, மீதமுள்ள 6 லட்சத்தை சத்தியசீலனே வைத்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது. பின்னர் பணத்தைக் கேட்கும் போதெல்லாம் மது வாங்கிக் கொடுத்து அவர்களைச் சமாதானப்படுத்தி வந்துள்ளார். வழக்கம் போல சம்பவத்தன்று இரவும் மூவருக்கும் இடையே பண விவகாரத்தில் வாக்குவாதம் முற்றி உள்ளது. அப்போது சமாதானம் பேசுவதாகக் கூறி சத்தியசீலன் தனது தென்னந்தோப்பிற்கு அவர்களை வரவழைத்துள்ளார்.
பின்னர் மூவரும் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தபோது மீண்டும் தகராறு ஏற்பட, ஆத்திரமடைந்த காசி, அங்கிருந்த இரும்பு பைப்பால் சத்தியசீலனின் தலையில் ஓங்கி அடித்திருக்கிறார். மயங்கிய நிலையில் இருந்த அவரை மீண்டும் அடிக்கச் சொல்லி ராமகிருஷ்ணன் தூண்டிவிட, சத்தியசீலன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். கொலை செய்த பிறகு இருவரும் சேர்ந்து தடையங்களை ஏரிக்கரையில் வீசி விட்டு, எதுவும் தெரியாதது போல் வீட்டிற்குச் சென்று தூங்கியுள்ளனர்.
அடுத்த நாள் காலை, சத்தியசீலன் பிணமாகக் கிடந்த இடத்தில் மக்களுடன் மக்களாக நின்று வேடிக்கை பார்த்துள்ளனர். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உடலை வாங்க உறவினர்கள் மறுத்தபோது, முன்னின்று உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்ததும் இதே காசி மற்றும் ராமகிருஷ்ணன் தான் என்பது போலீசாரையே அதிர வைத்துள்ளது. பண ஆசைக்காக உயிர்த் நண்பனையே அடித்துக் கொன்றுவிட்டு, நாடகமாடிய இருவரையும் நாகரசம்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் போச்சம்பள்ளி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.