
மதுரை மாவட்டம் சிலைமான் பகுதிக்கு அருகே உள்ள அஞ்சுகம் பகுதியை சேர்ந்தவர் 18 வயதான அரசு. இவரும் அழகு பாண்டி என்பவரும் பள்ளியில் ஒன்றாக படித்து நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். பள்ளிப்படிப்பை முடித்து அரசு பெயிண்டர் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அரசுவிற்கு போன் செய்த நண்பர் அழகு பாண்டி போலீஸ் பேசுவது போல பிராங்க் செய்துள்ளார்.
பின்னர் போலீசாரின் சைரன் சத்தம் மற்றும் வாக்கிடாக்கி சத்தம் போன்றவற்றை போனில் போட்டு உண்மையான போலீஸ் பேசுவது போல அரசுவின் தாயாரிடம் “உங்க பையன ஒழுங்கா இருக்க சொல்லுங்க ரொம்ப சேட்டை பண்றான்” என பேசி மிரட்டியுள்ளனர். இதில் அரசு அவரது தாய் மற்றும் தங்கை மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.
சில நாட்கள் கழித்து போலீஸ் போல பேசி தன்னை ஏமாற்றியது அழகு பாண்டி தான் என்பதை அரசு அறிந்துள்ளார். இதனால் அரசு மற்றும் அழகு பாண்டிக்கு இடையே வாக்குவாதம் முற்றி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இருவரையும் இரு வீட்டாரும் பேசி சமாதானம் செய்து வைத்துள்ளனர். வழக்கம் போல் இருவரும் அவர் அவர் வேலைகளை பார்த்து வந்த நிலையில் நேற்று முன்தினம் அரசு அழகு பாண்டியின் அண்ணன் செல்லப்பாண்டியை பார்த்துள்ளார்.
அப்போது அரசு செல்லப்பாண்டியை பார்த்து முறைத்ததாக சொல்லப்படுகிறது, இதனால் கோபத்தில் இருந்த அரசு அழகு பாண்டியை எங்கு தாக்கி விடுவாரோ என்ற எண்ணத்தில் நேற்று இரவு செல்லப்பாண்டி அரசுவின் வீட்டிற்கு அவரை தாக்க சென்றுள்ளார். அரசுவின் வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில் காலால் எட்டி உதைத்து கதவை திறந்த செல்லப்பாண்டி கையில் வைத்திருந்த கத்தியால் அரசுவை தாக்கியுள்ளார்.
இதற்கிடையே தடுக்க சென்ற அரசுவின் தாய் மற்றும் தங்கையையும் கத்தியால் குத்த முயற்சி செய்துள்ளார். இதை தடுத்து தாய் மற்றும் தங்கையை காப்பாற்றிய அரசு செல்ல பாண்டியை துரத்தி கொண்டு ஓடியுள்ளார். அப்போது மீண்டும் அரசுவை செல்லபாண்டி தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளார். அதில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்த அரசு உயிரிழந்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அரசுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அரசுவை கொலை செய்து விட்டு தப்பி சென்ற செல்லப்பாண்டி வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.