“திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்த பெண்” - தொடர்ந்து தவறாக பேசிய ஊர் மக்கள்.. அக்கா என்றும் பாராமல் தம்பி செய்த கொடூரம்!

உன்னால தான் நம்ம குடும்பத்தோட மனமே போகுது...
“திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்த பெண்” - தொடர்ந்து தவறாக பேசிய ஊர் மக்கள்.. அக்கா என்றும் பாராமல் தம்பி செய்த கொடூரம்!
Published on
Updated on
2 min read

நெல்லை மாவட்டம், தேவர்குளம் அருகே உள்ள தச்சு குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராமராஜ். இவருக்கு 28 வயதில் ராதிகா என்ற மகளும், 25 வயதில் கண்ணன் என்ற மகனும் உள்ளனர். ராதிகாவுக்கு இன்னும் திருமணமாகாத நிலையில் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அவரது தம்பியான கண்ணன் 9 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள நிலையில் கூலி தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்திருக்கிறார்.

வீட்டில் இருந்த ராதிகாவுக்கு அதே பகுதியை சேர்ந்த ஏற்கனவே திருமணமான ஆணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி அடிக்கடி இருவரும் தனிமையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இவர்களது கள்ளத்தொடர்பை அறிந்த ராதிகாவின் தம்பி கண்ணன் இருவரையும் கண்டித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக அக்கா மற்றும் தம்பிக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் ராதிகா திருமணமான ஆணுடன் தொடர்பில் இருப்பதாய் அறிந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் ஊர் மக்கள் ராதிகா குறித்து அவரது குடும்பத்தை பற்றியும் தவறாக பேசி வந்திருக்கின்றனர். இதனை கேட்டு மேலும் ஆத்திரமடைந்த கண்ணன் அவரது அக்காவிடம் “உன்னால தான் நம்ம குடும்பத்தோட மனமே போகுது” என கூறி சண்டையிட்டு வந்திருக்கிறார். அதே போல நேற்று மாலையும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

Admin

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறிய நிலையில் ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற கண்ணன், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து, தனது அக்கா என்றும் பாராமல் ராதிகாவைச் சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த ராதிகாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு ராதிகாவைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ராதிகாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக முயன்ற ராதிகாவின் தம்பி கண்ணனை அதிரடியாக கைது செய்தனர். திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்த தனது அக்காவையே தம்பியே வெட்டிக்கொலை செய்த இச்சம்பவம் தேவர்குளம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com