“ஆடி திருவிழாவில் அரங்கேறிய இரட்டைக் கொலை” - அடுத்தடுத்து வெட்டப்பட்ட இளைஞர்கள்.. சினிமா பாடல் போடாதது தான் காரணமா?

அங்கு வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல், இருவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக...
kanchipuram double murder
kanchipuram double murder
Published on
Updated on
2 min read

காஞ்சிபுரம் மாவட்டம், படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா நேற்று இரவு நடைபெற்றது. விழாவையொட்டி ஏராளமான பொதுமக்கள் கோவில் பகுதியில் திரண்டிருந்தனர். அப்போது இரவு நேரத்தில் மதுபோதையில் இருந்த சிலர், ரேடியோவில் சினிமா பாடல் ஒலிபரப்ப வேண்டும் எனக் கூறி அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், மதுபோதையில் இருந்த சிலரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் மற்றும் நீலகண்டன் ஆகிய இரு இளைஞர்களும் கோவில் அருகே இருந்துள்ளனர்.

அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல், இருவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த சந்திரசேகர் மற்றும் நீலகண்டன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்ட நிலையில், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு வந்த போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்ப முயன்றனர்.

Admin

அப்போது, உயிரிழந்த இரு இளைஞர்களின் உறவினர்கள் அங்கு திரண்டு, கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக் கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு உறவினர்களை போலீசார் சமாதானப்படுத்தி, இருவரின் உடல்களையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய 3 பேர் கொண்ட மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

கொலைக்கான காரணம் குறித்தும், முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா அல்லது கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு காரணமா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, கொலையான சந்திரசேகர் மற்றும் நீலகண்டனின் உறவினர்கள், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி படுநெல்லி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் காஞ்சிபுரம்–அரக்கோணம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆடி மாத கோவில் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் இரு இளைஞர்கள் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் படுநெல்லி கிராமத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com