“கிரிக்கெட் வீராங்கனை தூக்கிட்டு தற்கொலை” - அறையில் சிக்கிய உருக்கமான கடிதம்.. டி20 போட்டியில் தேர்வாகாதது தான் காரணமா?

என் மரணத்திற்கு நான் தான் காரணம் வேறு யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை...
gangavi
gangavi
Published on
Updated on
2 min read

சென்னையில் ஜிஎஸ்டி கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் ராஜஸ்தான் சேர்ந்த காஷ்மீர் குமார். இவரது மகள் 19 வயதுடைய ஏஞ்சல் காங்கவி, புதுச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். எனவே கங்காவி புதுச்சேரி,கதிர்காமத்தில் உள்ள மீனாட்சி பேட்டை பகுதியில் வாடகை வீட்டில் தனியாக வசித்துவந்தார். கிரிக்கெட் மீது அதீத ஆர்வம் கொண்ட ஏஞ்சல் காங்கவி, புதுச்சேரி துத்திப்பட்டில் உள்ள கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்து விளையாடி வந்திருக்கிறார். மேலும் டி20 போட்டியில் தேர்வாகி விளையாட கடுமையான பயிற்சி எடுத்து வந்த நிலையில், டி20 போட்டிக்கான வீராங்கனைகள் பட்டியலில் ஏஞ்சல் தேர்வாகவில்லை என கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்து மிகவும் சோகத்தில் மூழ்கியிருந்த அவர், பின்னர் நண்பர்களின் வழிகாட்டுதலின் படி இயல்பு நிலைக்கு திரும்பியதாக சொல்லப்படுகிறது. மேலும் சமீபகாலமாக கிரிக்கெட் விளையாட்டில் போதிய அளவு ஈடுபாடு இல்லாமல் தொடர்ந்து பயிற்சியின் போது தடுமாற்றம் அடைந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் கிரிக்கெட் பயிற்சியை முடித்துவிட்டு, இரவு வீடு திரும்பிய ஏஞ்சல் காங்கவி சோகத்துடன் இருந்துள்ளார். பின்னர் ஏஞ்சல் தனது பயிற்சியாளர் கதிர்வேலுக்கு செல்போனில் தொடர்பு கொண்ட நிலையில், அவர் வேலை காரணமாக செல்போனை எடுக்கவில்லை என தெரிகிறது.எனவே நீண்டநேரம் கழித்து ஏஞ்சலுக்கு பயிற்சியாளர் கதிர்வேல் மீண்டும் போன் செய்தபோது, அவர் நீண்ட நேரமாக அழைப்பை ஏற்காமல் இருந்துள்ளார்.

இதனால் சந்தேகமாடைந்த பயிற்சியாளர் ,சிறிது நேரத்திற்கு பின் ஏஞ்சல் வசிக்கும் வீட்டிற்கு நேரடியாக சென்று பார்த்த போது, வீட்டில் இருந்த மின்விசிறியில் ஏஞ்சல் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார், உடனடியாக வீட்டின் உரிமையாளர் துரைராஜ் உதவியுடன் கதவை உடைத்து ஏஞ்சலை மீட்ட பயிற்சியாளர், அவரை கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி ஏஞ்சல் காங்கவி பரிதாபமாக உயிரிழந்ததை தொடர்ந்து இது குறித்து வீட்டின் உரிமையாளரான துரைராஜ், கோரிமேடு, தன்வந்திரி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

Admin

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்த நிலையில், வழக்குப்பதிவு செய்து ஏஞ்சல் காங்கவி வசித்த வீட்டை சோதனை செய்தனர். அப்போது அவர் தற்கொலை செய்வதற்கு முன் கைப்பட எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியது. “அதில் என் வாழ்க்கை இவ்வளவு நாள் தான் என்பது கடவுள் எழுதி வைத்தது. என் மரணத்திற்கு நான் தான் காரணம் வேறு யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. ‘அம்மா,அப்பா மிஸ் யூ’ என ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்தார்” மேலும் அவரது செல்போனை போலீசார் சோதனையிட முயன்றபோது அது லாக் செய்யப்பட்டிருந்தது. இதனால் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி தற்கொலைக்கு முன் பயிற்சியாளருக்கு தொலைபேசியில் ஏஞ்சல் தொடர்பு கொண்டதால் டி 20 போட்டிக்கு தேர்வாகாத விரக்தி மற்றும் பயிற்சிகளில் சரியாக விளையாடாமல் தடுமாறுவதால் இம்முடிவை எடுத்துள்ளாரா?,பெற்றோர் தன்னுடன் இல்லையே என்ற வருத்தமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீராங்கனை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பு: மன அழுத்தம் அல்லது தற்கொ*லை எண்ணம் ஏற்பட்டால், அரசு உதவி மையமான 104 அல்லது சினேகா உதவி மையம் 044-24640050 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com