

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் அமைந்துள்ள கூல்கேட் என்ற தனியார் உணவகத்தில் பணியாற்றி வந்தவர் வெங்கடேசன். இவர் திடீரென்று நேற்று முன்தினம் உணவகத்திற்கு எதிரே உள்ள சாலையில் நின்று உடலில் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொண்ட நிலையில் அதனை பார்த்த அப்பகுதி மக்கள் தீயை அணைத்து அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு வெங்கடேசன் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தனர்.
அதனை தொடர்ந்து வெங்கடேசனிடம் விசாரணை மேற்கொண்டதில் தற்கொலைக்கான காரணம் வெளியாகியுள்ளது. சென்னையை சேர்ந்த வெங்கடேசன் கடந்த சில வருடங்களாக உணவகத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் அதே உணவகத்தில் பணிபுரியும் மற்றொரு பெண்ணுடன் வெங்கடேசனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி அடிக்கடி வெளியில் சென்று வந்ததாக சொல்லப்படுகிறது.
இதனை அறிந்து பெண்ணின் குடும்பத்தினர் உணவகத்தின் உரிமையாளரிடம் முறையிட்ட நிலையில் உணவாக நிர்வாகிகள் வெங்கடேசனை கண்டித்திருக்கின்றனர். இருப்பினும் அவர் தொடர்ந்து அந்த பெண்ணுடன் பழகி வந்த நிலையில் ஹோட்டல் நிர்வாகம் வெங்கடேசனை கடந்த ஐந்து மாதத்திற்கு முன் பணியை விட்டு நீக்கி இருக்கின்றனர். இதனால் வேலை இல்லாமல் இருந்த வெங்கடேசன் அவ்வப்போது மது அருந்திவிட்டு ஹோட்டல் நிர்வாகத்திடம் தகராறு செய்து வந்திருக்கிறார்.
அதே போல நேற்று முன்தினம் ஹோட்டலுக்கு வந்து தகராறு செய்த வெங்கடேசன் திடீரென உணவகத்தின் எதிரே உள்ள சாலை தடுப்பு கட்டையின் மீது ஏறி நின்று கொண்டு மீண்டும் வேலை கேட்டதோடு கையில் பெட்ரோல் பாட்டிலுடன் வேலை கொடுக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டல் விடுத்துள்ளார். ஆனால் யாரும் அவரை கண்டு கொள்ளாத நிலையில் திடீரென பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்ட நிலையில் உணவகத்தை நோக்கி ஓடி வந்துள்ளார். அப்போது உணவகத்தில் இருந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக தண்ணீர் ஊற்றி தீயை அணைத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். நடுரோட்டில் இளைஞர் ஒருவர் தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.