தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தைச் சேர்ந்தவர் 42 வயதுடைய விஜயகுமார். இவர் அதே பகுதியில் கசாப்பு கடை வைத்து நடத்தி வைத்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் பகுதியை சேர்ந்த குமுதவள்ளி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் திருமணத்திற்கு பிறகு தர்மபுரியில் வீடு எடுத்து வசித்து வந்த நிலையில் அவ்வப்போது குமுதவள்ளி கணவருடன் சேர்ந்து ஓமலூரில் உள்ள தாய் வீட்டுக்கு வந்து செய்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.
அப்போது விஜயகுமாருக்கு ஓமலூர் கமலாபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த 44 வயதுடைய ஸ்ரீவித்யா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.ஸ்ரீவித்யாவுக்கு திருமணமாகாத நிலையில் இருவரும் தொடர்ந்து பழகி வந்தனர். இவர்களது பழக்கமானது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி விஜயகுமார் முதல் மனைவி குமுதவள்ளியை விவாகரத்து செய்துவிட்டு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு ஸ்ரீவித்யாவை திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. தற்போது இந்த தம்பதிக்கு மூன்று வயதில் அசோகசிவசுந்தரி என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் மனைவியுடன் அவரது தாய் வீட்டில் தங்கி இருந்த விஜயகுமார் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனைவி ஸ்ரீவித்யா வேறு ஒருவருடன் பழகி வருவதாக சந்தேகப்பட்டு விஜயகுமார் தொடர்ந்து தகராறு செய்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த ஸ்ரீவித்யாவை தகாத வார்த்தைகளால் திட்டி விட்டு குழந்தையை எடுத்து கொண்டு வெளியில் சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்ரீவித்யா கணவன் மீது தொளசம்பட்டி போலீசில் புகாரளித்துள்ளார்.
எனவே இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் குழந்தையை மீட்டு கணவன் மனைவியை சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பியதாக சொல்லப்படுகிறது. ஆனால் விஜயகுமாருடன் செல்ல மறுத்த ஸ்ரீவித்யா தனது தாய் வீட்டிற்கு சென்று வசித்து வந்திருக்கிறார். இதனால் மனைவி மீது கடும் ஆத்திரத்தில் இருந்த விஜயகுமார் நேற்று காலை ஸ்ரீவித்யா பணிபுரியும் பள்ளிக்கு சென்று அவரை மாணவர்கள் கண்முன்னே சரமாரியாக வெட்டி கொலை செய்திருக்கிறார். பின்னர் குழந்தையை தூக்கிக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்ற நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஸ்ரீவித்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் தப்பி சென்ற விஜயகுமாரை தேடி வந்த நிலையில் நேற்று மாலை வ=விஜயகுமார் அவரது வீட்டிற்கு அருகே விஷம் குடித்து உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். அவருக்கு அருகிலேயே 3 வயது பெண் குழந்தையும் இறந்து நிலையில் சடலமாக கிடந்துள்ளது இருவரின் உடலையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்த நிலையில் விஜயகுமார் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவியையும் குழந்தையையும் கொன்று கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்