சேலம் மாநகர் களரம்பட்டி அருகே உள்ள சலவையாளர் குடியிருப்பு பகுதியில், மனைவிக்கு கள்ளத் தொடர்பு இருப்பதாக சந்தேகித்த கணவர், நைலான் கயிறால் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சேலம் களரம்பட்டி அருகே உள்ள சலவையாளர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி 40 வயதுடைய ஜெயந்தி. இவர்களுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமாகி இரு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், தம்பதியினர் இருவரும் இணைந்து சேலம் குகை பகுதியில் சொந்தமாக சமோசா கடை வைத்து நடத்தி வந்துள்ளனர்.
இருவரும் மாறி மாறி கடையை கவனித்து வந்த நிலையில், மகேந்திரனுக்கு நாளடைவில் மனைவியின் நடத்தையின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால அடிகடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று காலை சுமார் 10.30 மணியளவில், வீட்டில் இருந்த மகேந்திரன் மற்றும் ஜெயந்தி இடையே திடீரென கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தகராறு முற்றிய நிலையில், இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.
இதை ஆத்திரமடைந்த மகேந்திரன், வீட்டில் இருந்த நைலான் கயிற்றை எடுத்து ஜெயந்தியின் கழுத்தை இறுக்கி நெரித்ததாக கூறப்படுகிறது. அப்போது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நினைத்த ஜெயந்தி அலறி சத்தமிட்டுள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்க முயன்றனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் ஜெயந்தி சம்பவ இடத்திலேயே மூச்சு திணறி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தகவலறிந்த கிச்சிப்பாளையம் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஜெயந்தியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சம்பவ இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஜெயந்திக்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக மகேந்திரன் சந்தேகித்ததாலேயே, இருவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததும் , அதே சந்தேகத்தின் காரணமாக ஆத்திரத்தில் குழந்தைகளின் கண்முன்னே மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்ததும் தெரியவந்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.