

இளைஞர் மீது பொய்யான பாலியல் பலாத்கார வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டி, அவரிடமிருந்து ₹2 லட்சம் பறித்ததாக கூறப்படும் குற்ற வழக்கில், 24 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை மிரட்டி ₹2 லட்சம் பணம் பறித்த பிறகும் , அந்தப் பெண் மேலும் பணம் கேட்டுள்ளார். பணம் கொடுக்காவிட்டால் சிறைக்கு அனுப்பி விடுவேன் என்றும் மிரட்டி உள்ளார்.
திங்கள் கிழமை காலை சாட்டிலைட் பேருந்து நிலையம் அருகே குற்றம் சாட்டப்பட்ட பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அவர் மீது பிரேம் நகர் காவல் நிலையத்தில் ஏற்கனவே மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. அந்தப் புகார் கடந்த ஜூலை 24 அன்று பதிவு செய்யபட்டுள்ளது. காந்திபுரம், ஹார்ட்மேன் சாலையைச் சேர்ந்த அபிஷேக் என்ற இளைஞர், ஜூலை 24 அன்று பிரேம் நகர் காவல் நிலையத்தில் அம்ரிதா கவுர் என்ற பெண்ணிற்கு எதிராகப் புகார் அளித்தார். ஒரு பொய்யான பாலியல் வழக்கில் தன்னை சிக்க வைப்பதாக அம்ரிதா மிரட்டியதாக அபிஷேக் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
பரேலியைச் சேர்ந்த அபிஷேக்கிற்கு, பெண் ஒருவர் போனில் அழைத்துப் பேசியுள்ளார். முதலில் தவறுதலாக அழைப்பு சென்று விட்டதாக கூறிய அவர், தொடர்ந்து அவருடன் பேச தொடங்கியுள்ளார். அபிஷேக்கும் அந்த பெண்ணுடன் நட்பாக பேச தொடங்கி, நாளடைவில் அந்தப் பெண்ணுடன் நெருக்கமாகப் பழகியுள்ளார். இந்நிலையில், அம்ரிதா இளைஞரை வீடியோ கால் செய்யுமாறு தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். அபிஷேக்கும் காதல் மயக்கத்தில் நம்பி வீடியோ காலில் பேசியுள்ளார். அப்போது, தனது அந்தரங்க உடல் பாகங்களை அவர் கட்டியதாக கூறப்படுகிறது. இதனை அந்தப் பெண் அவரது அனுமதியின்றி ரகசியமாக ஸ்கிரீன் ரெக்கார்ட் செய்துள்ளார். பின்னர் அதை வைத்து மிரட்ட தொடங்கியுள்ளார்.
அந்தப் பெண், அபிஷேக்கின் பயத்தை பயன்படுத்தி அவரிடமிருந்து 2 லட்சம் ரூபாய் பறித்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் தொடர்ந்து பணம் கேட்டுக் கொண்டே இருந்துள்ளார். அபிஷேக்கின் கூற்றுப்படி, "கேட்ட பணத்தை கொடுக்கவில்லை என்றால், பாலியல் வழக்கில் சிக்க வைத்து விடுவேன்” என்றும் மிரட்டி உள்ளார்.
புகாரைப் பெற்ற பிறகு, பிரேம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். போலீசாரின் கூற்றுப்படி, திங்கள்கிழமை காலை, குற்றம் சாட்டப்பட்ட அம்ரிதா சாட்டிலைட் பேருந்து நிலையம் அருகே இருந்ததாக தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் காலை 11:10 மணியளவில் காவல்துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர். காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்டவரிடம் விசாரணை நடத்தி வருவதுடன், இந்த வழக்கு தொடர்பான மற்ற விவரங்களையும் விசாரித்து வருகின்றனர்.
காவல்துறையின் கூற்றுப்படி, விசாரணையின் போது அம்ரிதா கவுர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பேராசையின் காரணமாகவும், பிழைப்புக்காகவும் இந்தக் குற்றத்தைச் செய்ததாக அவர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவரின் வாக்குமூலம் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த வழக்கில் தேவையான சட்ட நடவடிக்கைகள் முடித்த பின்னர், அந்த பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் செயல்முறையை காவல்துறை தொடங்கியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.