
சென்னை மாவட்டம், கிழக்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் 23 வயதான பெண். இவர் வேளச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.எனவே இவர் தினமும் தாம்பரம் பகுதியில் இருந்து வேளச்சேரியில் உள்ள தனது அலுவகத்திற்கு பேருந்து சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். அதேபோல் கடந்த (ஜூலை 02) ஆம் தேதி காலை வேலைக்கு செல்ல தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி செல்லும் அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சுமார் 9:50 மணி அளவில் வேளச்சேரி ரயில்வே மேம்பாலம் அருகில் அரசு பேருந்து சென்று கொண்டிருக்கும் போது பேருந்தில் பயணித்த இளைஞர் ஒருவர் இந்த பெண்ணிடம் பாலியல் ரீதியான சீண்டல்கள் செய்து பேருந்தில் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
ஒரு நிமிடம் என்ன செய்வதென்று தெரியாமல் அச்சத்தில் ஆழ்ந்த அந்த இளம்பெண் அவரது ஆண் நண்பருக்கு செல்போன் மூலம் நடந்ததை தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர் செல்போன் மூலமாக பெண்ணை ஆறுதல் படுத்தி நடந்ததை கேட்டறிந்து இது குறித்து போலீசில் புகார் அளிக்க கூறியுள்ளார்.
பின்னர் அவரது ஆண் நண்பர் அறிவுறுத்தலின் பேரில் அந்த பெண் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100 க்கு செல்போனில் அழைத்து, அரசு பேருந்தில் தன்னிடம் இளைஞர் ஒருவர் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக புகார் அளித்தார்.
அரசு பேருந்தில் இளம்பெண்ணுக்கு ஒருவர் தொந்தரவு கொடுத்த தகவல் அறிந்த வேளச்சேரி ரோந்து போலீசார் அடுத்த 5 நிமிடத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட இளைஞரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
காவல் நிலையத்தில் வைத்து அந்த இளைஞரை விசாரித்தபோது, அவர் பெயர் ராஜேஷ் குமார் என்பதும் 27 வயதான இவர் கிழக்கு தாம்பரம், கணபதி புரம், அசோக் நகர் பகுதியை சேர்ந்த இளைஞர் என்பதும் தெரியவந்தது. பேருந்தில் ஒருவர் இளம்பெண்ணிடம் அத்துமீறிய சம்பவம் அப்பேருந்து பயணிகள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.