பொதுவாகவே நம் பல மோசடிகளை கேள்விப்பட்டிருப்போம். குறிப்பாக, ATM கார்டு மோசடி, OTP மோசடி, குறைந்த விலையில் பொருள் தருவதாக கூறும் மோசடி, ஆன்லைன் பொருள் மோசடி என்று அதன் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். இவை பொருள் வைத்து ஒருசிலரை ஏமாற்றும் பொதுவான ஒரு மோசடி போலத்தான் நமக்கு இருக்கும். ஆனால், புதுச்சேரியில் நடந்த மோசடி அந்த பகுதியில் 'இப்படியெல்லாமா மோசடி செய்வார்கள்?' என்று அப்பகுதியில் அதிர்ச்சியையும், கேள்வியையும் ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில், ராஜா தெருவில் உள்ள விடுதி மேலாளர் ராமசாமி என்பவரிடம், "டாக்டர் விக்னேஷ்" என அறிமுகமான நபர் சமீபத்தில் நிகழ்த்திய இந்த மோசடிதான் அங்கு பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.
'திருமணமான பெண்களை இயற்கை முறையில் கர்ப்பமாக்கினால் ரூ. 25 லட்சம் சம்பளம் மற்றும் ரூ. 2 லட்சம் முன்பணம் வழங்கப்படும்' என்று ஆசை வார்த்தைகள் கூறி இந்த மோசடி நடந்துள்ளது. இதை உண்மை என்று அந்த விடுதி மேலாளர் ராமசாமி நம்பியுள்ளார். மேலும், 'பதிவு கட்டணம்' என்ற பெயரில் ரூ. 49,500 பணத்தை ஒரு மர்ம நபரின் QR கோடிற்கு பணத்தை அனுப்பியுள்ளார். மீதி ரூ. 500-க்கு விடுதி உரிமையாளரிடம் உதவி கேட்டுள்ளார். அப்போதுதான் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உரிமையாளர் அந்த எண்ணைத் தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.
அந்த லாட்ஜ் மேலாளரை ஏமாற்றிய கும்பல், வெறும் பணத்தை மட்டும் ஆசைவார்த்தையாக கூறாமல், மிகத் தந்திரமான "உளவியல் ரீதியான" பொய்களையும் அவரிடம் கூறி நம்பவைத்துள்ளனர். அந்த மர்ம நபர் பேசும்போது, "செயற்கை கருத்தரிப்பு மையத்திற்கு வரும் பல பெண்களுக்கு கணவர்களால் குழந்தை பாக்கியம் தர இயலாது. செயற்கை முறையை விட இயற்கையான உறவு மூலம் கருத்தரிப்பதையே அந்தப் பெண்களும் அவர்களது கணவர்களும் விரும்புகிறார்கள். இயற்கை முறையில் பிறக்கும் குழந்தையே ஆரோக்கியமானது என்று நினைத்து கணவர்களும் சம்மதித்து உறவு வைக்க அனுமதிக்கிறார்கள். இது கணவனின் சம்மதத்துடன்தான் நடக்கிறது. உங்களைப் போன்ற நல்ல திடகாத்திரமான உடல் உள்ள வாலிபர்களைத்தான் மனைவியுடன் சேர அனுமதிக்கிறார்கள். கணவர்களும் நீங்கள் இருக்கும் மூடிய அறைக்குள் உங்கள் இருவருடனும் இருப்பார்கள் இதில் சட்டவிரோதம் எதுவுமில்லை" என்பது போன்ற பிம்பத்தை உருவாக்கி ஆசை காண்பித்துள்ளார். மேலும், "இது முற்றிலும் ரகசியமாக வைக்கப்படும், யாருக்கும் சந்தேகம் வராது" எனக்கூறி ராமசாமியின் தயக்கத்தை உளவியல் உடைத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட ராமசாமி அளித்த புகாரின் பேரில் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். "ரகசிய வேலை, டோனர் வேலை எனக்கூறி முன்பணம் கேட்கும் 99% அழைப்புகள் மோசடியே. மக்கள் பேராசைப்பட்டு பணத்தை இழக்க வேண்டாம்" என கடுமையாக காவல்துறை எச்சரித்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்