
சிவகங்கை மாவட்டம் நாட்டக்குடி பகுதியை சேர்ந்தவர் 60 வயதான விவசாயி சோனை முத்து. நாட்டக்குடியில் இவரது விவசாய நிலம் இருப்பதால் சோனை முத்து அதே பகுதியில் தனியாக தங்கி விவசாயம் பார்த்து வந்துள்ளார். இவரது குடும்பம் பக்கத்து ஊரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் விவசாயி சோனை முத்து கடந்த (ஜூலை 20) அன்று மீன் பிடிக்க அருகில் இருந்த கணவாய்க்கு சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே சிங்கமுத்து, சமயதுரை என இருவர் மீன் பிடித்துக் கொண்டு இருந்துள்ளனர்.
பின்னர் இருவரும் ஒவ்வொரு பக்கம் மீன் பிடித்து கொண்டிருந்த நிலையில் சிங்கமுத்து, சோனை முத்துவிடம் சென்று “இவர் தான் சமயதுரை ஊரில் இவர் வளர்ந்து வரும் ரௌவுடிகளில் ஒருவர்” என கூறியுள்ளார். இதனை கேட்டு கோபமடைந்த சோனை முத்து, சமயத்துரையை பற்றியும் அவரது சாதியை பற்றியும் தரக்குறைவாக பேசியுள்ளார். இதனால் அங்கேயே இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
சோனை முத்து அவரது வீட்டிற்கு சென்ற நிலையில்,சமயத்துரை மற்றும் அவரது நண்பர் சிங்கமுத்து சோனை முத்துவின் மீது இருந்த கோபத்தால் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி சமயதுரை தனது மற்றொரு நண்பரை கூட்டு சேர்த்துக்கொண்டு மூவரும் சேர்ந்து சோனை முத்துவின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு வெளியில் அமர்ந்து சோனை முத்து அவரது நண்பரான பாண்டியன் என்பவரிடம் பேசி கொண்டு இருந்துள்ளார். சோனை முத்துவை வீட்டு வாசலில் இருந்து தெருவுக்கு இழுத்து வந்த சமயதுரை மற்றும் அவரது நண்பர்கள் சோனை முத்துவின் தலையை தனியாக வெட்டி எடுத்து அவரை கொலை செய்துள்ளனர்.
மேலும் காப்பாற்ற வந்த பாண்டியையும் தலையில் வெட்டி விட்டு சோனை முத்துவின் தலையை ஒரு கட்டைப்பையில் போட்டு எடுத்து சென்றுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சோனை முத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். அதே சமயம் வழக்கு பதிவு செய்து சோனை முத்துவின் தலையையும் தப்பித்து சென்ற குற்றவாளிகளையும் தேடி வந்துள்ளனர். சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் உள்ள பல்வேறு இடங்களில் தேடி பார்த்த நிலையிலும் சோனை முத்துவின் தலை கிடைக்காமல் இருந்துள்ளது.
இதற்கிடையே போலீசாருக்கு வந்த போன் கால் ஒன்றில் சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் எதிரே உள்ள கண்மாயில் ஒரு முதியவரின் தலை இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக கண்மாய்க்கு விரைந்த போலீசார் அங்கிருந்த சோனை முத்துவின் தலையை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். தொடர்ந்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் நேற்று (ஜூலை 22) காலை சிங்கமுத்துவை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் மற்ற இரண்டு குற்றவாளிகளையும் தீவிரமாக தேடி வருகின்றனர். ஒருவர் தலை வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.