கொலை நடந்த இரவில் 6 போன் கால்! தொழிலதிபர் கொலை வழக்கில்.. மகனிடம் போலீஸ் தீவிர விசாரணை?

தனது மனைவி ஷாலு மற்றும் குழந்தையுடன் வெளியே சென்றிருந்ததாகவும், அதிகாலை 3 மணியளவில் வீட்டுக்கு திரும்பியபோதுதான் தந்தை ரத்த வெள்ளத்தில் கிடந்ததை
கொலை நடந்த இரவில் 6 போன் கால்! தொழிலதிபர் கொலை வழக்கில்.. மகனிடம் போலீஸ் தீவிர விசாரணை?
Published on
Updated on
2 min read

கான்பூரில் மருந்து வியாபாரி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மகனின் பெயரும் தற்போது போலீஸ் விசாரணையில் வந்துள்ளது. கொலை நடந்த இரவில், கொலையாளி என்று சந்தேகிக்கப்படும் நபர் புதிய சிம் கார்டு மூலம் அந்த தொழிலதிபரின் மகன் சுப்ரத்துக்கு 6 முறை போன் செய்திருப்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே இந்த வழக்கில் சுப்ரத்தின் மனைவி உட்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய தகவல் விசாரணையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

கான்பூரைச் சேர்ந்த 63 வயது வினீத் மினோச்சா மருந்து வியாபாரம் செய்து வந்தார். செப்டம்பர் 5ஆம் தேதி அதிகாலை அவரது வீட்டில் அவர் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அவரது உடலில் 26 கத்திக்குத்து காயங்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்தபோது அவரது மகன் சுப்ரத் வீட்டில் இல்லை. சுப்ரத் தனது மனைவி ஷாலு மற்றும் குழந்தையுடன் வெளியே சென்றிருந்ததாகவும், அதிகாலை 3 மணியளவில் வீட்டுக்கு திரும்பியபோதுதான் தந்தை ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்ததாகவும் கூறப்பட்டுள்ளது. பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் விசாரணை தொடங்கியபோது, வீட்டுக்கு நன்கு தெரிந்த சிலரின் பெயர்கள் போலீசாருக்கு கிடைத்தன. குறிப்பாக வினீத்தின் முன்னாள் ஊழியர் விஷால் கவுதம் மீது சந்தேகம் சென்றது. அவர் முன்பு வினீத்தின் நிறுவனத்தில் வேலை பார்த்தவர். பின்னர் திருட்டு குற்றச்சாட்டு காரணமாக வேலையில் இருந்து நீக்கப்பட்டதாக போலீசார் கூறியுள்ளனர். வேலை போன பிறகும் அவர் சுப்ரத்துடன் தொடர்பில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்தது. இப்போது அந்த தொடர்புதான் போலீசாருக்கு முக்கியமானதாக மாறியுள்ளது. விஷால் செப்டம்பர் 3ஆம் தேதி புதிய சிம் கார்டு வாங்கியதாக போலீஸ் கமிஷனர் ரகுபீர் லால் தெரிவித்துள்ளார். வினீத் கொலை செய்யப்பட்டதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் அந்த சிம் வாங்கப்பட்டுள்ளது. அந்த புதிய எண்ணை பயன்படுத்தி ஷாலுவுடனும் விஷால் பேசியதாக கூறப்படுகிறது. அதே எண்ணிலிருந்து சுப்ரத்துக்கும் 6 முறை போன் சென்றுள்ளது. கொலைக்காக புதிய எண்ணை பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் நிலையில், அதே எண்ணிலிருந்து சுப்ரத்துக்கு ஏன் போன் செய்யப்பட்டது என்பதுதான் இப்போது போலீசாரின் முக்கிய கேள்வியாக உள்ளது.

ஒரு சில அழைப்புகள் மட்டும் இல்லை என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சுப்ரத் மற்றும் விஷால் இடையே மே 1 முதல் செப்டம்பர் 5 வரை 309 முறை போன் தொடர்பு இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். சுப்ரத், ஷாலு மற்றும் விஷாலுடன் தொடர்புடைய 7 மொபைல் எண்களின் அழைப்பு பதிவுகளையும் போலீசார் எடுத்துள்ளனர். இந்த பதிவுகள் சுமார் 1,000 பக்கங்கள் அளவுக்கு இருப்பதாக கூறப்படுகிறது. கொலைக்கு முன்பு இருவரும் எப்போது பேசினார்கள், எவ்வளவு நேரம் பேசினார்கள், கொலை நடந்த நாளில் என்ன தொடர்பு இருந்தது என்பதையெல்லாம் போலீசார் இப்போது பார்த்து வருகின்றனர். இந்த வழக்கில் சுப்ரத்தின் மனைவி ஷாலுவும் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். போலீஸ் கூறும் தகவலின்படி, வினீத்தை கொலை செய்ய விஷாலை அணுகியது ஷாலு என்று விஷால் விசாரணையில் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தனக்கு ரூ.6 லட்சம் தருவதாக ஷாலு கூறியதாகவும் அவர் தெரிவித்ததாக போலீசார் கூறுகின்றனர். ஆனால் ஷாலு இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். எனவே, விஷால் கூறிய தகவல்கள் மட்டும் வைத்து முடிவு செய்யாமல், மற்ற ஆதாரங்களுடனும் போலீசார் அதை ஒப்பிட்டு வருகின்றனர்.

கொலை நடந்த நாளில் வீட்டுக்குள் நடந்ததாக கூறப்படும் சம்பவங்களையும் போலீசார் தற்போது ஒன்றாக இணைத்து வருகின்றனர். விஷாலும் அவரது கூட்டாளி ராஜ்கிஷோரும் வீட்டுக்குள் சென்றதாகவும், அங்கு வினீத் மீது தாக்குதல் நடந்ததாகவும் போலீசார் கூறுகின்றனர். சம்பவத்துக்குப் பிறகு இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் விசாரணையில் தகவல் கிடைத்துள்ளது. விஷால் தனது கூட்டாளிக்கு பல முறை போன் செய்ததாகவும், பின்னர் டாக்ஸியில் வேறு இடத்துக்கு சென்றதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த டாக்ஸி பயணம் தொடர்பான தகவல்களும் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

வினீத்தின் சொத்துகள் மற்றும் குடும்பத்தின் பண விஷயங்களும் விசாரணையில் இடம்பெற்றுள்ளன. 2022ஆம் ஆண்டு வினீத் பதிவு செய்த உயிலில், அவரது மனைவி, மகன் சுப்ரத் மற்றும் மகள் ஆகியோருக்கு சொத்துகளில் பங்கு கொடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவரது மருமகள் ஷாலுவின் பெயர் அந்த உயிலில் இடம்பெறவில்லை என்றும் கூறப்படுகிறது. இதற்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். அதேபோல் சுப்ரத்துக்கு சில கடன்கள் இருந்ததற்கான தகவல்களும் விசாரணையில் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் இவை கொலைக்கான காரணம் என்று இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

இந்த வழக்கில் இப்போது போலீசாருக்கு முக்கியமாக இருப்பது அந்த 6 அழைப்புகள்தான். கொலைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வாங்கப்பட்ட புதிய சிம். அதிலிருந்து கொலை நடந்த இரவில் சுப்ரத்துக்கு 6 அழைப்புகள். அதற்கு முன்பாகவே விஷால் மற்றும் சுப்ரத் இடையே நூற்றுக்கணக்கான தொலைபேசி தொடர்புகள். இந்த தகவல்கள் அனைத்தையும் ஒன்றாக வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆனால், சுப்ரத் கொலைக்கு தொடர்புடையவர் என்று போலீசார் இதுவரை அதிகாரப்பூர்வமாக கூறவில்லை. அவருக்கு கொலை திட்டம் பற்றி ஏதேனும் தெரியுமா, அந்த 6 அழைப்புகளின் பின்னணி என்ன, விஷாலுடன் அவர் தொடர்ந்து பேசியதற்கு காரணம் என்ன என்பதுதான் தற்போது விசாரணையில் உள்ளது. அழைப்பு பதிவுகள், சிசிடிவி காட்சிகள், பணம் தொடர்பான தகவல்கள் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் அனைத்தையும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகே இந்த கொலையின் முழு பின்னணி தெரியவரும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com