accusts
accusts

“வேலைக்கு சென்று தனியாக வந்த பெண்” - வழிமறித்து தனிமையில் இருக்க வற்புறுத்திய இளைஞர்கள்.. நியாயம் கேட்ட கணவருக்கு வந்த கொலை மிரட்டல்!

அவர் அணிந்திருந்த ஷாலை பிடித்து இழுத்து தன்னுடன் வந்து தனிமையில் இருக்குமாறு அழைத்து அநாகரீகமாக பேசியுள்ளார்.
Published on

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம் சத்தரை கிராமம் அடுத்துள்ள பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் இவருக்கும்  அதே பகுதியை சேர்ந்த 24 வயதுடைய சௌமியா என்பவருடன் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. சௌமியாவும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் கணவன் மனைவி இருவரும் கடம்பத்தூரில் வீடு எடுத்து தங்கி வேலை செய்து வந்துள்ளனர்.

கணவன் மனைவி இருவரும் வெவ்வேறு இடங்களில் வேலை செய்து வந்ததால் சௌமியா வழக்கமாக வேலைக்கு தனியாக சென்று வந்துள்ளார். இந்நிலையில் சௌமியா வழக்கம் போல் கடந்த 21-ஆம் தேதி வேலை முடிந்து மாலை வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சத்தரை கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த 28 வயதுடைய அருண்(எ)ராஜேஷ் என்பவர் சௌமியாவை வழி மறுத்து, அவர் அணிந்திருந்த ஷாலை பிடித்து இழுத்து தன்னுடன் வந்து தனிமையில் இருக்குமாறு அழைத்து அநாகரீகமாக பேசியுள்ளார். மேலும் கையை பிடித்து இழுத்து பைக்கில் ஏறும்படி கட்டாயப்படுத்திய நிலையில் சௌமியா அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார்.

police station
police station Admin

அப்போது சௌமியாவின் செல்போனை பறித்த கொண்டு அருண் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளார். இதையடுத்து சௌமியா தனது கணவர் ராஜ்குமாரிடம் இதைப் பற்றி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜ்குமார் அருணிடம் சென்று கேட்டபோது, அருண் மற்றும் அவனுடன் இருந்த சத்தரை கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த கோபி, பேரம்பாக்கத்தைச் சேர்ந்த கபிலன்(எ)துளசி, அருந்ததியர் காலனியைச் சேர்ந்த மனோஜ் மற்றும் கம்பத்தூரைச் சேர்ந்த பாபு ஆகியோர் ஒன்றாக சேர்ந்த ராஜ்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி, கையால் அடித்தும், கால்களால் எட்டி உதைத்தும், மறைத்து வைத்திருந்த கத்தியால் தாக்கியும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனை பார்த்த அப்பகுதி மக்கள் பலத்த காயம் அடைந்த ராஜ்குமாரை மீட்டு கடம்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்து சௌமியா மப்பேடு போலீசில் கொடுத்த புகாரின் பேரில் அருண், கோபி, கபிலன் மற்றும் மனோஜ் ஆகிய 4 பேரை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள பாபு என்பவரை தேடி வருகின்றனர். பெண்கள் சாலையில் நடமாட முடியாத நிலை நிலவி வருவதாக அப்பகுதி பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் வேலைக்கு சென்று தனியாக வந்த பெண்ணிடம் இளைஞர்கள் பிரச்சனை செய்தது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com