திரிபுராவின் கோமதி மாவட்டத்தில், தனது மருமகளை பாலியல் வன்புணர்வு செய்ததாகக் கூறப்பட்டு 80 வயது முதியவர் ஒருவர், வெள்ளிக்கிழமை அன்று கடுமையாகத் தாக்கப்பட்டு, காலணிகளால் மாலை அணிவிக்கப்பட்டு, ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் ஒரு கம்பத்தில் கட்டி வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திரிபுராவின் கோமதி மாவட்டத்தில், தன் மகன் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, மருமகளைப் பாலியல் வன்புணர்வு செய்ததாகக் கூறப்பட்டு 80 வயது முதியவர் ஒருவர், வெள்ளிக்கிழமை அன்று அந்த கிராம மக்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு, காலணிகளால் மாலை அணிவிக்கப்பட்டு, ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் ஒரு கம்பத்தில் கட்டப்பட்டார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. நூதன்பஜார் காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட கிராமத்தில் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள உள்ளூர்வாசிகள், 80 வயது மதிக்கத்தக்க அந்த முதியவர் கடந்த பல மாதங்களாகத் அவரது மருமகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமை செய்து வருவதாகக் குற்றம் சாட்டினர்.
கடந்த வெள்ளிக்கிழமை காலை, குற்றம் சாட்டப்பட்டவரின் மகன் அவர்களது வீட்டின் கூரையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, பதற்றம் அதிகரித்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஆத்திரமடைந்த கிராமவாசிகள், அந்த முதியவரையே மரணத்திற்குக் காரணம் எனக் கருதி, அவரைப் பொதுவெளியில் வைத்து அவமானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த முதியவரின் கழுத்தில் காலணிகளால் ஆன மாலை அணிவித்து, கிராமம் முழுவதும் ஊர்வலமாக அழைத்துச் சென்று, பின்னர் ஒரு கம்பத்தில் கட்டிபோட்டுள்ளனர்.
"எண்பது வயது முதியவர் கடந்த சில மாதங்களாகத் தனது மருமகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதன் விளைவாக அவரது மகன் தற்கொலை செய்துகொண்டதாகவும் கிராம மக்கள் கையெழுத்திட்ட ஒரு மனு எங்களுக்குக் கிடைத்தது," என்று நூதன்பஜார் காவல் நிலையப் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அந்த நபரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ள போதிலும், இதுவரை முறைப்படியான புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும், அதிகாரப்பூர்வ புகார் கிடைத்தவுடன் சட்ட நடவடிக்கை தொடங்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "நாங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த நபரை மீட்டோம். அவர் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார். அந்த முதியவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமவாசிகள் குழு ஒன்று கோரியுள்ளது, இருப்பினும் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ புகாரும் வரவில்லை," என்று நூதன்பஜார் காவல் நிலையப் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார். முறைப்படி புகார் பதிவு செய்யப்பட்டவுடன், சட்டப்படி காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.