“மின்சாரம் பாய்ச்சி குழந்தைகளை கொன்ற தந்தை” - மனைவி வேறு ஒருவருடன் சென்றதால் விபரீதம்.. பூட்டிய அறையில் மீட்கப்பட்ட கருகிய சடலங்கள்!

கட்டிலில் மின்சார வயர்கள் உடலில் கட்டப்பட்ட நிலையில், வாயில் ரத்தம் மற்றும் நுரை வெளியேறியபடி உயிரிழந்து கிடந்ததை...
father with their child
father with their child
Published on
Updated on
2 min read

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள சிறுபாடு சவேரியார் புரம் பகுதியைச் சேர்ந்தவர் மரிய மிக்கேல். லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்த இவருக்கு, மனைவி சபிதா ரோனிகம் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களது மகள் மரிய நிரோஷா புதுக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பும், மகன் மரிய கெனிஸ்டன் 7-ம் வகுப்பும் படித்து வந்தனர். இவர்களுடன் மரியமிக்கேலின் 75 வயதான தந்தை அந்தோணி முத்துவும் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மரியமிக்கேலின் மனைவி சபிதாவுக்கு, அதே பகுதியை சேர்ந்த வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் சபிதா கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவர் மற்றும் குழந்தைகளைப் பிரிந்து காதலனுடன் சென்றதாக சொல்லப்படுகிறது.எனவே குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த மரிய மிக்கேல் கடும் மன உளைச்சலில் இருந்து வந்திருக்கிறார். மேலும் குழந்தைகளை பராமரிக்க வேண்டி லாரி ஓட்டுநர் வேலையை நிறுத்திவிட்டு, அவ்வப்போது உள்ளூரிலேயே பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மனைவி பிரிந்து சென்ற வேதனையில் இருந்த மரிய மிக்கேல், நேற்று முன்தினம் (ஜூலை 09) இரவு விபரீத முடிவு ஒன்று எடுத்திருக்கிறார். 

அதன்படி, முதலில் தனது இரண்டு குழந்தைகளுக்கு சிக்கன் உள்ளிட்ட உணவுகளை வாங்கிக் கொடுத்து, சாப்பிட வைத்திருக்கிறார். வீட்டின் வெளிப்புறத்தில் மரியமிக்கேலின் வயதான தந்தை அந்தோணி முத்து தூங்கிக் கொண்டிருந்து நிலையில், வீட்டுக்குள் சென்ற மரிய தூங்கிக்கொண்டிருந்த இரண்டு குழந்தைகளின் கை, கால்களில் மின்சார வயர்களை கட்டியிருக்கிறார். பின்னர் தனது உடலிலும் வயர்களைக் கட்டிக்கொண்டு மின்சாரத்தை பாய்ச்சி குழந்தைகளை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து மறுநாள்  வீட்டின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாததால் சந்தேகமடைந்த மரிய மிக்கேலின் தந்தை இது குறித்து அருகில் இருந்தவர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். 

suicide spot
suicide spot

இதனால் சந்தேகமடைந்த அவர்கள் உடனடியாக புதுக்கோட்டை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, மரிய மிக்கேல் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளான மரிய நிரோஷா, மரிய கெனிஸ்டன் ஆகியோர் கட்டிலில் மின்சார வயர்கள் உடலில் கட்டப்பட்ட நிலையில், வாயில் ரத்தம் மற்றும் நுரை வெளியேறியபடி உயிரிழந்து கிடந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து, மூவரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, மரணத்திற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி அருகே மனைவி குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றதாகக் கூறப்படும் சூழலில், மனவேதனையில் இருந்த தந்தை தனது இரண்டு குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com