40 வயதான பெண்ணின் கணவருக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்ததால், அவரைக் கர்ப்பமாக்குவதாகக் கூறி, அப்பெண்ணை அவரது மாமனார் மற்றும் நாத்தனாரின் கணவரால் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. கருச்சிதைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அப்பெண் தனது மாமனார் மற்றும் நாத்தனாரின் கணவர் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை சுமத்தி நவாபுரா காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்தார். மேலும், தனது அந்தரங்கப் படங்களை பொதுவெளியில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி, தன்னை மௌனமாக இருக்கச் சொல்லி கணவர் மிரட்டியதாகவும் அவர் கணவரின் மீது குற்றம் சாட்டினார்.
பாதிக்கப்பட்ட பெண் தனது முதல் தகவல் அறிக்கையில், தனக்கு 2024 பிப்ரவரியில் திருமணம் ஆகி, கணவரின் வீட்டிற்கு சென்றதாக தெரிவித்துள்ளார். சில வாரங்களுக்குப் பிறகு, அவரது வயதின் காரணமாக அவரால் கருத்தரிக்க முடியாமல் போகலாம் என்று அவரது மாமியார் வீட்டினர் கூறியுள்ளனர். மேலும், தம்பதியினர் கருவுறுதல் சிகிச்சை எடுத்துக்கொள்ளுமாறும் அவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
மருத்துவ அறிக்கைகளின்படி, அவரது கணவரின் விந்தணுக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்ததால், அவரால் கருத்தரிக்க முடியாது என்பது தெரியவந்துள்ளது. மருத்துவ ஆலோசனையின் பேரில் அவர் செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சையை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், அது பலனளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், அப்பெண்ணின் கணவர் மேற்கொண்டு எந்த சிகிச்சையையும் மேற்கொள்ள மறுத்துள்ளார். இதனையடுத்து ஒரு குழந்தையைத் தத்தெடுக்கலாம் என்று பரிந்துரைத்தார். ஆனால், அவரது மாமியார் வீட்டார் அதற்குச் சம்மதிக்கவில்லை. 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம், அவர் தனது அறையில் உறங்கிக் கொண்டிருந்தபோது, அவரது மாமனார் உள்ளே நுழைந்து அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. அவர் உதவிக்காகக் கூச்சலிட்டபோது, மாமனார் தன் மருமகளை அறைந்துள்ளார்.
இதனையடுத்து அந்த பெண் தன் கணவனிடம் அந்தத் துயரச் சம்பவம் பற்றிச் சொன்னபோது, அவர் தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று கூறி, அந்தப் பாலியல் வன்கொடுமை பற்றி வாய் திறக்க வேண்டாம் என்று இரக்கமின்றி அவர் மனைவியிடம் கூறியுள்ளார். மேலும், இதுகுறித்து யாரிடமாவது சொன்னால், அப்பெண்ணின் நிர்வாணப் படங்களைப் பரப்பி விடுவதாக அவர் மனைவிடம் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. தனது மாமனாரால் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் , ஆனால் கர்ப்பம் ஆகவில்லை என்றும் அப்பெண் தெரிவித்துள்ளார். இதனையடுத்து 2024 டிசம்பரில், அவரது நாத்தனாரின் கணவர் அவரைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவரும் இந்தக் குற்றத்தை பலமுறை மீண்டும் செய்ததாகக் கூறப்படுகிறது. புகார்தாரர் ஜூன் மாதம் கர்ப்பமாகியுள்ளார். ஆனால் ஜூலை மாதம் அவருக்குக் கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. ஜூலை மாதத்தின் கடைசி வாரத்தில், அவர் காவல்துறையை அணுகியிருக்கிறார். காவல்துறை இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுவந்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.