விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி பகுதியில் வருபவர் தூய்மை பணியாளரான 42 வயதுடைய சாந்தி. இவரது கணவர் பாண்டியராஜ் என்பவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில்17 வயதுடைய மகன் சந்தீப் குமார் மற்றும் 13 வயதுடைய மகள் யாழினி ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் பாண்டியராஜின் அக்காவான 45 வயதுடைய ஸ்ரீதேவி என்பவரின் கணவரும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இறந்து விடவே அவரும் பாளையம்பட்டியில் உள்ள அருந்ததியர் காலனி வீட்டில் வசித்து வரும் சாந்தியுடன் உடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சாந்தி என்பவர் தனது குடும்பத்திற்கு குறி பார்ப்பதற்காக காரியாபட்டி அருகே உள்ள கல்குறிச்சி மணி நகரைச் சேர்ந்த கோடாங்கி முத்து என்பவரிடம் சென்றுள்ளார்.
அப்போது குடும்ப வறுமை தீர சில பரிகாரம் செய்ய வேண்டும் என பாளையம்பட்டியில் உள்ள சாந்தியின் வீட்டிற்கு கோடாங்கி முத்து என்பவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வந்து குறி பார்த்து பரிகாரம் செய்து விட்டு சென்றுள்ளார். பின்னர் கணவனை இழந்து தனியாக வாழ்ந்து வரும் சாந்தியிடம் அவருடன் சேர்ந்து வாழ ஆசைப்படுவதாக கூறியுள்ளார். இதற்கு சாந்தி இணங்க மறுத்ததால் பலமுறை தொலைபேசியில் பேசி தனது ஆசைக்கு இணங்க வேண்டுமென வற்புறுத்தி வந்த நிலையில் சாந்தி அதற்கு இணங்க தொடர்ந்து மறுத்ததால் ஆத்திரமடைந்த கோடாங்கி முத்து நேற்று முன்தினம் கதவை பூட்டாமல் தூங்கிக் கொண்டிருந்த சாந்தி மற்றும் ஸ்ரீதேவி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடியுள்ளார்.
இதனை தொடர்ந்து சாந்தி மற்றும் ஸ்ரீதேவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அருப்புக்கோட்டை நகர் காவல் துறையினர் தீக்காயம் அடைந்த சாந்தி மற்றும் ஸ்ரீதேவியை மீட்டு அவசர சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வீட்டின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த சந்தீப் குமார் மற்றும் யாழினி ஆகியோர் தீ காயங்களின்றி உயிர் தப்பினர்தீக்காயுடன் மீட்கப்பட்ட சாந்தி மற்றும் ஸ்ரீதேவி இருவருக்கும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் விருதுநகரில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தீக்காயம் அடைந்த சாந்தி மற்றும் ஸ்ரீதேவியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சாந்தி என்பவர் தான் கணவர் இல்லாமல் தனியாக வசித்து வருவதை பயன்படுத்தி தன் வீட்டிற்கு குறி பார்க்க வந்த முத்து என்பவர் தன்னை தொலைபேசியிலும் நேரடியாகவும் தன்னுடன் சேர்ந்து வாழுமாறு வற்புறுத்தி வந்ததாகவும், அதற்கு முடியாது என்று கூறிய நிலையில் அவர் செயலை செய்திருக்கலாம் என்று அளித்த தகவல் அடிப்படையில் கோடாங்கி முத்துவை அருப்புக்கோட்டை நகர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது மேற்கண்ட உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தது. வீட்டில் தூங்கி கொண்டிருந்த இரண்டு பெண்கள் மீது கோடாங்கி பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.