

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த பாலப்பம்பட்டியை சேர்ந்தவர் பானுமதி (45). இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி. இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில வருடங்களாக பிரிந்து விட்டனர். அதைத் தொடர்ந்து தனது மகள் பிரியங்காவுடன் தனியாக வசித்து வந்தார் பானுமதி . இந்த நிலையில் பானுமதி இந்திரா நகர் பகுதியில் உள்ள தனியார் மில்லுக்கு வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்தார். பானுமதி ஒரு நாள் வேலை முடிந்து பஸ்சுக்காக காத்துக் கொண்டிருந்தபோது ஒரு விபத்தில் ஆனைமலையை சேர்ந்த பிரபாகரன் என்பவர் காயம் அடைந்துள்ளார். அங்கு அவரை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளார். அதிலிருந்து இருவருக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. பானுமதியும் அவ்வப்போது பிரபாகரனிடம் கை செலவுக்கு பணம் வாங்கி வந்ததக்க சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் பானுமதி தனது மகள் பிரியங்காவிற்கு அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கு திருமணம் முடித்து வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் பானுமதிக்கும் பிரபாகரனுக்கும் தகராறு ஏற்படுகிறது. இதை பார்த்த பானுமதியின் மருமகன் அவருடனான கள்ளத்தொடர்பை துண்டிக்குமாறு எச்சரித்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அதை தவிர்ந்து வந்துள்ளார் பானுமதி. ஆனால் பிரபாகரன் விடாது அவரை தொலைபேசியில் அழைத்து பேசுமாறு கட்டாயப்படுத்தி உள்ளார். இதனால் பானுமதி உடுமலை போலீசில் பிரபாகரன் மீது புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்ததாக கூறப்படுகிறது.
பின்னர் ஜாமீனில் வெளியே வந்த பிரபாகரன் பழனியில் கொத்தனார் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மீண்டும் பிரபாகரன் பானுமதியை செல்போனில் தொடர்பு கொண்டு உள்ளார். ஆனால் அவர் அழைப்பை எடுக்கவில்லை. இதில் ஆத்திரமடைந்த பிரபாகரன் நேற்று இரவு 10.30 மணியளவில் பிரபாகரன் பாலப்பம்பட்டியில் உள்ள பானுமதி இல்லத்திற்கு வந்துள்ளார். அவர் மீது பானுமதி போட்ட வழக்கை வாபஸ் வாங்குமாறும், பானுமதி பேரில் அவருக்கு சிம் கார்டு வாங்கி தருமாறும் கேட்டுள்ளார். இதனால் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பிரபாகரன் அருகில் கிடந்த மண்வெட்டியை எடுத்து பானுமதியின் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதை பார்த்த அருகில் இருந்த பொள்ளாச்சி திப்பம்பட்டியை சேர்ந்த மயில்சாமி தடுக்க முயன்றுள்ளார். அப்போது அருகில் கிடந்த கல்லை எடுத்து அவரையும் தாக்கியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள் உடுமலை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடம் விரைந்து, அங்கு பானுமதியை கொலை செய்துவிட்டு அமர்ந்திருந்த பிரபாகரனை கைது செய்தனர். அதன் தொடர்ச்சியாக காயம் அடைந்த மயில்சாமியை மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பானுமதியின் உடலும் பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டு, இது குறித்து மயில்சாமி அளித்த புகாரின் பேரில் உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் பாலப்பம்பட்டி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்