

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த அசோக் குமார் என்பவர் காரைக்காலில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது காரைக்காலைச் சேர்ந்த திருமணமான பெண்ணுடன் அசோக் குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருக்கமாக இருக்கும் வீடியோவை அந்தப் பெண்ணின் மகனுக்கு அசோக்குமார் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மகன் தாயிடம் விசாரித்துள்ளார். மேலும் இது தொடர்பாக அந்தப் பெண்ணின் மகன் அளித்த புகாரின் பேரில் காரைக்கால் நகர காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அசோக்குமாரை விசாரணைக்கு உட்படுத்தினர்.
அப்போது மேலும் சில அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளன. அவரது செல்போனை ஆய்வு செய்ததில், 18 வயதுக்கு உட்பட்ட சிறுமியுடன் தொடர்புடைய தகவல்கள் இருப்பது தெரிய வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து திருமணமான பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது, அது தொடர்பான வீடியோவை அவரது மகனுக்கு அனுப்பியது மற்றும் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அசோக்குமார் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கு காரைக்கால் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த காரைக்கால் சிறப்பு நீதிமன்ற நடுவர் மோகன், அசோக்குமாருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனையும், பாலியல் வன்கொடுமை வழக்கில் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.
மேலும், குற்றவாளிக்கு மொத்தமாக ரூ.4 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. காரைக்கால் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் இன்று வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பு, போக்சோ வழக்குகளில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக அமைந்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்