

சென்னை மாவட்டம், திருவெற்றியூர் பெரியார் பகுதியைச் சேர்ந்தவர 26 வயதுடைய பிரின்சி. இவர் பட்டப்படிப்பு படித்துமுடித்துவிட்டு ஓஎம்ஆர் சாலை காரப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு தலைவலி மற்றும் கழுத்து வலிப் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதற்காக கடந்த மாதம் பள்ளிக்கரணையில் உள்ள தனியாருக்கு சொந்தமான காமாட்சி என்ற மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டர். பின்னர் வேறொரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தலைவலி மீண்டும் அதிகரித்ததால், கடந்த (அக்டோபர் 5) ஆம் தேதி மீண்டும் காமாட்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் எம்ஆர்ஐ (MRI SCAN) ஸ்கேன் எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்த எம்ஆர்ஐ ஸ்கேன் கருவி பழுதடைந்த காரணத்தால் பிரின்சியை மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் மூலம் சிறுசேரியில் உள்ள காமாட்சி மருத்துவமனையின் மற்றொரு கிளைக்கு ஸ்கேன் எடுக்க அனுப்பி வைத்துள்ளனர். ஸ்கேன் எடுப்பதற்காக அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்ட தால் பிரின்சியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாகவும், மூக்கில் ரத்தம் வெளியேறியதாகவும் சொல்லப்படுகிறது.
இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் பிரின்சியின் மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. அதை தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த பிரின்சி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பிரின்சி இறந்த நிலையில் அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றால் சிகிச்சைக் கட்டணமாக ரூபாய் 10 லட்சம் செலுத்த வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
உரிய சிகிச்சை அளிக்காமல் மருத்துவர்களின் அலட்சியத்தால் தான் பிரின்சி உயிரிழந்ததாகக் கூறி குடும்பத்தினர் மருத்துவமனை நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து மருத்துவமனை வழக்கத்திற்கு வந்த பள்ளிக்கரணை போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களைச் சமாதானப்படுத்தினர். பின்னர் பிரின்சியின் உடலை போலீசார் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் திடீரென இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.