

நாகப்பட்டினம் மாவட்டம், அகரகொந்தகை கிராமத்தை சேர்ந்தவர 27 வயதுடைய நந்தினி. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து உள்ளார். அப்போது சோழவரம் அடுத்த காந்திநகரை சேர்ந்த 30 வயதுடைய ராகுல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் நெருங்கி வந்த நிலையில் நாளடைவில் இவர்களது பழக்கம் காதலாக மாறி காதலித்து வந்திருக்கின்றனர்.
இதனை தொடர்ந்து இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த (ஆகஸ்ட் 29) ஆம் தேதி சென்னை வடபழனியில் உள்ள கோவிலில் திருமணம் நடைபெற்று உள்ளது. பின்னர் கணவன் மனைவி இருவரும் ராகுலின் பெற்றோர் வீட்டில் தங்கி வசித்து வந்திருக்கின்றனர். நந்தினி இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் சரிவர உணவு எடுத்துக்கொள்ளாமல் இருந்துள்ளார். எனவே ராகுலின் தாய் சரிவர உணவு எடுத்துக் கொள்ளுமாறு தொடர்ந்து கண்டித்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் மன உலைச்சலில் இருந்த நந்தினி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில் வீட்டில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் வீட்டிற்கு வந்த ராகுலின் பெற்றோர்கள் நந்தினியின் நிலையை கண்டு அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அருகில் இருந்த மருத்துவமனை அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கு நந்தினியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்திருக்கின்றனர்.
இதனை தொடர்ந்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோழவரம் போலீசார் நந்தினியின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நந்தினியின் உறவினர்கள் சோழவரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமான 3 மாதத்தில் இளம் கர்ப்பிணி பெண் இறந்த நிலையில் கோட்டாட்சியர் விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. தங்களது பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உள்ளதால் உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தினர். 2 மாத இளம் கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.