
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கஞ்சநாயக்கன்பட்டியில் உள்ள திரௌபதி அம்மன் கோவில் திருவிழா 28 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடக்கிறது. ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நிகழ்ச்சி என 18 நாட்கள் நடைபெறும், திருவிழாவின் 15- ஆம் நாள் விழாவான நேற்று அம்மனுக்கு திருமண சீர்வரிசை கொண்டு வரப்பட்டது.
கிராம மக்கள் சார்பில் ஏற்கனவே ஒரு தரப்பினர் சீர்வரிசை கொண்டு சென்ற நிலையில், மற்றொரு தரப்பினர், நாங்களும் சீரவரிசை கொண்டு வருவோம் என பட்டாசு வெடித்த படி ஊர்வலமாக சீரெடுத்து வந்துள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் 3 லட்ச ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை வைத்துக் கொண்டு, வழியெங்கும் வெடித்துக் கொண்டு கோவில் நோக்கி சென்றுள்ளனர்.
அப்போது வெடித்த வானவேடிக்கை ஒன்று, மின்சார வயரில் பட்டு, கீழே மோட்டார் சைக்கிளில் இருந்த பட்டாசு மூட்டை மீது விழுந்துள்ளது. இதனால் மூட்டையில் இருந்த அனைத்து வெடிகளும் வெடித்து சிதறியது. இதில் சிறுவர்கள் கார்த்திகேயன், தமிழ்ச்செல்வன் உட்பட செல்வராஜ், ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல்சிதறி உயிரிழந்தனர்.
வெடி வெடித்த லோகநாதன், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்த நிலையில் உயிரிழந்தார். இச்சம்பவத்தால் 4 பேர் இறந்ததை தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரடியாக வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் இந்த வெடி விபத்தில் 2 பைக், ஒரு வீடு, 2 மளிகை கடைகள் உட்பட ஒரு காரும் சேதமடைந்தன. எந்த வகையான வெடி என கண்டறிய தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வுசெய்து வருகின்றனர். தொடர்ந்து உயிரிழந்தோருக்கு நிவாரணம் வழங்க வருவாய் துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்