
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 14-வது வார்டு சிவசக்தி நகரில் உள்ள, பூலோக ராஜன் என்பவருக்கு சொந்தமான வீடு பல நாட்களாக பூட்டிக்கிடந்தது. இந்நிலையில் பூட்டிக் கிடந்த அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது.
இது குறித்து சந்தேகம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் தாராபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த தாராபுரம் காவல் ஆய்வாளர் விஜய சாரதி தலைமையில் தலைமை காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உட்புறம் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அங்கு 45 வயது மதிக்கதக்க ஆணின் பிணம் மிகவும் அழுகிய நிலையில் இருந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இறந்தவர் தாராபுரம் சிவசக்தி நகர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது மகன் வீரமணி (வயது 49) என்பதும், இவர் கூலி தொழில் செய்து வந்தார் என்றும் தெரியவந்துள்ளது.
உடலை கைப்பற்றிய போலீசார் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் சிவ சக்தி நகர் பகுதி மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்